தமிழக வெற்றிக் கழகம் – தேமுதிக கூட்டணி குறித்து பிரேமலா விஜயகாந்த் பரபரப்பு பதில் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால், தற்போதில் இருந்தே அரசியல் கட்சியினர் தங்களது கூட்டணி கட்சிகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர். அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வந்த தேமுதிக, இதுவரை எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடாமல் உள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி வர வேண்டும் என்று பிரேமலா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கரூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “2026இல் தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஒன்று. ஆனால், அதில் எந்த ஆண்டு என்பது குறிப்பிடப்படாமல் இருந்தது. இந்த விஷயத்தில் தனது வாக்குறுதிதான் முக்கியம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவரிடம், “சட்டமன்ற தேர்தலில் விஜய் கட்சியுடன் கூட்டணியா..? என்ற கேள்வியை அவரிடம் தான் கேட்க வேண்டும். அதற்கு அவர்தான் பதில் கொடுக்க வேண்டும். வரும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி ஆட்சி அமைந்தால் நல்லது தான். அப்போது தான், ஒரு எதிர்க்கட்சியாக சுட்டிக்காட்ட முடியும். திமுக பொதுக்குழு கூட்டத்தில் மறைந்த கேப்டனுக்கு நிறைவேற்றப்பட்ட இரங்கல் தீர்மானத்திற்கு நாங்கள் வரவேற்பு அளித்தது அரசியல் நாகரீகம்.
234 தொகுதிகளுக்கும் இரண்டு நாட்களில் கூட்டம் நடத்தப்பட்டு, பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். கரூர் மாவட்டத்தில் மணல் கொள்ளை, 24 மணி நேரம் மது விற்பனை, லாட்டரி விற்பனை, கனிமவளக் கொள்ளை அதிகம் நடந்து வருகிறது. முதலில் இதை சரி செய்ய வேண்டும். அதேபோல், தமிழ்நாட்டில் தனியாக வசிக்கும் முதியோர்களுக்கு பாதுகாப்பு இல்லை” என்று குற்றம்சாட்டியுள்ளார்.
Read More : பிரபல வங்கியில் 4,500 காலியிடங்கள்..!! டிகிரி முடித்திருந்தால் போதும்..!! மாதம் எவ்வளவு சம்பளம் தெரியுமா..?