தமிழ்நாடு சிறைத்துறையில் காலியாக உள்ள உதவி சிறை அலுவலர் (ஆண்கள் மற்றும் பெண்கள்) பதவிகளுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
மற்றத் துறை தேர்வுகள் போல் அல்லாமல், இந்த தேர்வுக்கு ஏதேனும் டிகிரி பட்டம் படித்திருந்தால் போதுமானது. மேலும், இந்த தேர்வுக்கான பாடப் பிரிவுகள் பெரும்பாலும் குரூப் 1, குரூப் 2 தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு அறிந்த ஒன்றாக இருப்பதால், மேற்படி தேர்வர்கள் இதற்கு விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
காலியிடங்கள்: உதவி சிறை அலுவலர் – ஆண்கள் (54), பெண்கள் (5)
கல்வித் தகுதி: பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் பொது பிரிவு விண்ணப்பதாரர், 01.07.2023 அன்று 18 -32 வயதுக்குள் இருக்க வேண்டும். ஏனைய பிரிவினருக்கும், அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கும் வயது வரம்பு இல்லை.
சம்பளம்: ரூ.35,400 முதல் ரூ.1,30,400 வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், பணியிட ஒதுக்கீடு விதி ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.
தேர்வுக்கான பாடத்திட்டம்: எழுத்துத் தேர்வு 2 தாள்களைக் கொண்டது. தாள் I-ல் அரசியலமைப்பு மற்றும் மனித உரிமைகள், இந்தியா மற்றும் தமிழ்நாட்டிற்கு முக்கியத்துவம் அளிப்பதுடன் கூடிய மாநில நிர்வாகம், சமூக பொருளாதார பிரச்சனைகள், தேசிய அளவிலான நடப்பு நிகழ்வுகள், மாநில அளவிலான நடப்பு நிகழ்வுகள் ஆகிய தலைப்புகளில் இருந்து 200 கேள்விகள் கேட்கப்படும்.
2ஆம் தாளில், தமிழ்மொழி தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு, பொது அறிவு, திறனறிவுத் தேர்வு ஆகியவற்றில் இருந்து 200 கேள்விகள் கேட்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி..? விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.