தமிழக அரசியலில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி கணக்குகள் தற்போதே உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளன. அதன் ஒரு பகுதியாக, இன்று சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவரை நேரில் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார்.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு இரு கட்சிகளின் உயர்மட்ட தலைவர்களும் நேருக்கு நேர் சந்தித்துப் பேசியிருப்பது, அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த முக்கிய சந்திப்பின் போது, வரும் சட்டமன்ற தேர்தலை எவ்வாறான வியூகங்களுடன் எதிர்கொள்வது மற்றும் இரு கட்சிகளுக்கு இடையேயான தொகுதிப் பங்கீடு குறித்த முதற்கட்டப் பேச்சுவார்த்தைகள் விரிவாக நடத்தப்பட்டதாக தெரிகிறது.
கடந்த சில வாரங்களாகவே அதிமுக மற்றும் பாமக இடையே கூட்டணி அமைவதற்கான சூழல் நிலவி வந்த நிலையில், இன்றைய அதிகாரப்பூர்வச் சந்திப்பு அந்த எதிர்பார்ப்புகளை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இதற்கிடையே, இன்று மாலை அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமகவின் பிரம்மாண்டப் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. எடப்பாடி பழனிசாமியுடனான இந்த சந்திப்பைத் தொடர்ந்து நடைபெறும் பொதுக்கூட்டம் என்பதால், அதிமுகவுடனான கூட்டணி குறித்து அன்புமணி ராமதாஸ் மேடையிலேயே அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


