“மனைவி அதிகமாக சம்பாதித்தாலும், குழந்தைகளுக்கான பராமரிப்பு செலவை வழங்குவதில் இருந்து தந்தை தப்பிக்க முடியாது..” உயர் நீதிமன்றம் தீர்ப்பு..!

husband wife

டெல்லி உயர்நீதிமன்றம் பெற்றோர் பொறுப்பை வலியுறுத்தும் வகையில் முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. தாய் அதிகமாக சம்பாதிக்கிறார் என்பதற்காக மட்டும், தந்தை தனது குழந்தைகளை பராமரிக்கும் பொறுப்பில் இருந்து தப்பிக்க முடியாது என்று நீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது.


நீதிபதி ஸ்வர்ணா காந்தா சர்மா இந்த தீர்ப்பை வழங்கினார். கீழ்நீதிமன்றம் விதித்த இடைக்கால பராமரிப்பு உத்தரவை எதிர்த்து ஒரு தந்தை தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மூன்று சிறுவயது குழந்தைகளுக்காக மாதம் தலா ரூ.10,000 (மொத்தம் ரூ.30,000) செலுத்த வேண்டும் என்ற உத்தரவை அடிப்படையாக ஏற்றுக்கொண்டது.

வழக்கின் பின்னணி

2014 ஜனவரியில் திருமணம் செய்துகொண்ட தம்பதியர், கணவர் உடல், மன மற்றும் பொருளாதார ரீதியான துன்புறுத்தல் செய்ததாக கூறி பிரிந்தனர். இதையடுத்து, மனைவி, பெண்கள் மீது நிகழும் குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் புகார் அளித்து, குழந்தைகளுக்கான பராமரிப்பு தொகையை கோரினார்.

2023 டிசம்பரில், விசாரணை நீதிமன்றம், குடும்ப வன்முறை வழக்கு முடியும் வரை அல்லது குழந்தைகள் பெரியவர்களாகும் வரை, கணவர் மாதம் ரூ.30,000 செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இதை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையையும், 2024 மார்ச்சில் செஷன்ஸ் நீதிமன்றம் நிராகரித்தது.

தந்தையின் வாதம்

உயர்நீதிமன்றத்தில், தந்தை தனது மாத வருமானம் ரூ.9,000 மட்டுமே என்றும், மனைவி ரூ.34,500 சம்பாதிப்பதாகவும் கூறி, தன்னால் இத்தொகையை செலுத்த முடியாது என்றார். மனைவி அதிகம் சம்பாதிக்கும் நிலையில் முழுப் பொறுப்பையும் தன்னமேல் சுமத்துவது சட்டத்திற்கு எதிரானது என்றும், பராமரிப்பு சட்டத்தை மனைவி தவறாக பயன்படுத்துவதாகவும் வாதிட்டார்.

தாயின் பதில்

இதற்கு பதிலளித்த பெண், இந்த உத்தரவு மட்டும் குழந்தைகளுக்கான பராமரிப்புக்கே தொடர்புடையது என்றும், குழந்தைகள் தன்னுடன் இருப்பதால் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் தானே ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தார். தன்னுடைய வருமானம், தந்தையின் சட்டப்பூர்வ கடமையை நீக்க முடியாது என்றும் கூறினார்.

நீதிமன்றத்தின் கருத்து

தந்தையின் வாதங்களை நிராகரித்த உயர்நீதிமன்றம், “குழந்தைகளை பராமரிப்பது இரு பெற்றோரின் சட்டபூர்வ, நெறிமுறை மற்றும் சமூக கடமை. தாய் அல்லது தந்தை யார் அதிகம் சம்பாதிக்கிறார்கள் என்பது, அந்த பொறுப்பை குறைக்காது” என்று கூறியது. மேலும், குழந்தைகள் தாயின் காவலில் இருப்பதால், அவர் சம்பாதிப்பதோடு சேர்த்து, முதன்மை பராமரிப்பாளராகவும் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

உத்தரவில் சிறிய மாற்றம்

அதே நேரத்தில், நீதிமன்றம் பராமரிப்பு தொகையை மாதம் ரூ.30,000 இலிருந்து ரூ.25,000 ஆக குறைத்தது. மனைவி சட்டத்தை தவறாக பயன்படுத்துவதாக கூறிய குற்றச்சாட்டையும் நீதிமன்றம் நிராகரித்தது. மாறாக, குழந்தைகளின் நலனில் அவர் காட்டும் பொறுப்புணர்வையே அது வெளிப்படுத்துகிறது என்று தெரிவித்தது.

இந்த தீர்ப்பு, பெற்றோர் இருவரும் இணைந்து குழந்தைகளின் பொறுப்பை ஏற்க வேண்டும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தும் முக்கியமான தீர்ப்பாக கருதப்படுகிறது.

Read More : எந்த தாய் தந்தைக்கும் இந்த நிலை வரக் கூடாது.. பெற்றோரின் உணர்வுகளுக்கு பிள்ளைகள் மதிப்பளியுங்கள்! – நீதிபதிகள் கருத்து..

RUPA

Next Post

2025 ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணி எவ்வாறு செயல்பட்டது..? - ஒரு மீள் பார்வை..

Wed Dec 31 , 2025
How did the Indian team perform in international cricket in 2025?
india team

You May Like