நேற்று தமிழர் திருநாளான தை பொங்கல் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.. இதை தொடர்ந்து இன்று விவசாயிகளுக்கு உழுவதற்கு உதவி செய்து மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. மேலும் மனிதன் அறநெறியுடன் எப்படி வாழ வேண்டும் என்றும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து கருத்துகளையும் இரண்டே வரி குறளில் சொல்லி நல்வழிப்படுத்திய திருவள்ளூவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக பொங்கலுக்கு அடுத்த நாள் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது..
அந்த வகையில் இன்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அதில் “ திருவள்ளுவர் தினமான இன்று, ஏராளமான மக்களுக்கு உத்வேகம் அளிக்கும் படைப்புகளையும் சிந்தனைகளையும் கொண்ட பன்முக ஆளுமை திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துகிறேன்.
நல்லிணக்கமும் கருணையும் நிறைந்த ஒரு சமூகத்தின் மீது அவர் நம்பிக்கை வைத்தார். தமிழ்க் கலாச்சாரத்தின் சிறந்த அம்சங்களுக்கு அவர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார். திருவள்ளுவப் பெருந்தகையின் சிறப்பான அறிவாற்றலை வெளிப்படுத்தும் திருக்குறளை நீங்கள் அனைவரும் படிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.



