நவம்பர் 1ஆம் தேதி முதல் ஆதார் சேவைகளில் 3 முக்கியமான மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளன. நிர்வாகச் செயல்பாடுகளை எளிமையாக்கி, பொதுமக்கள் தங்கள் வீட்டிலிருந்தே பல காரியங்களைச் செய்துகொள்ளும் வகையில் இந்த மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனி ஆதார் மையத்திற்கு நேரில் செல்லாமலேயே பெயர், முகவரி, பிறந்த தேதி, மொபைல் எண் போன்ற விவரங்களை ஆன்லைன் மூலமாகச் சமர்ப்பித்துத் திருத்த முடியும் என்பது இதன் முக்கிய அம்சமாகும்.
தானியங்கி சரிபார்ப்பு மற்றும் கட்டணம் :
இனி ஆதார் விவரங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்கும்போது, பான் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் அல்லது ரேஷன் கார்டு போன்ற அதிகாரப்பூர்வ ஆவணங்களைப் பயன்படுத்தி உங்கள் தகவல்கள் தானாகவே சரிபார்க்கப்படும்.
கட்டணங்கள் : பெயர், முகவரி அல்லது மொபைல் எண்ணை மாற்ற ஆன்லைனில் ரூ.75 கட்டணமாக வசூலிக்கப்படும். கைரேகை/கருவிழி ஸ்கேன் (பயோமெட்ரிக்) அல்லது புகைப்பட மாற்றம் செய்ய ரூ.125 கட்டணமாகும்.
குழந்தைகளுக்கான பயோமெட்ரிக் அப்டேட் இலவசம் :
5 முதல் 7 வயது வரம்பிலும், 15 முதல் 17 வயது வரம்பிலும் உள்ள குழந்தைகளுக்கான பயோமெட்ரிக் புதுப்பிப்புகள் இலவசமாக செய்யப்படும். ஆன்லைனில் ஆவணங்களைப் புதுப்பிக்கும் இலவச வசதி ஜூன் 14, 2026 வரை தற்காலிகமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேதிக்குப் பிறகு, ஆன்லைன் புதுப்பிப்புகளுக்குக் கட்டணம் வசூலிக்கப்படும். ஆதார் அட்டையை மீண்டும் அச்சிட கோரினால் ரூ.40 கட்டணம் செலுத்த வேண்டும்.
ஆதார் – பான் இணைப்பு & KYC எளிமையாக்கம் :
அனைத்து பான் கார்டு வைத்திருப்பவர்களும் டிசம்பர் 31ஆம் க்குள் தங்கள் பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டியது கட்டாயம். தவறினால், ஜனவரி 1, 2026 முதல் பான் எண் செயலிழந்து, நிதி மற்றும் வரிப் பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும்.
அதே நேரத்தில், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் KYC செயல்முறை எளிமையாக்கப்பட்டுள்ளது. ஆதார் OTP, வீடியோ-KYC அல்லது நேரடிச் சான்று மூலமாக KYC-ஐ முடிக்கலாம். இதனால் ஆவணச் சமர்ப்பிப்புக்கான காகிதப் பணிகள் குறையும்.
‘வீட்டிற்கே வரும் ஆதார்’ சேவை கட்டணங்கள் :
வீட்டிலிருந்தே ஆதார் சேவை பெறுவதற்கான கட்டணங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. முதல் நபருக்கு ரூ.700 மற்றும் அதே முகவரியில் உள்ள ஒவ்வொரு கூடுதல் நபருக்கும் ரூ.350 என சேவை கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. தரவுப் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்ட சரிபார்ப்பு முறைகள் மூலம் உறுதி செய்யப்படுவதாக அதிகாரிகள் ஆறுதல் அளித்தாலும், பயனாளர்கள் அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்களை மட்டும் நம்பிச் செயல்பட அறிவுறுத்தப்படுகிறார்கள்.



