சென்னை மாநகர எல்லை, அரக்கோணம், அச்சிறுப்பாக்கம் வரை விரிவாக்கம் செய்யப்படும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் நடத்திய கூட்டத்தில் மாநகர எல்லையை விரிவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை முழுமை திட்டம் மூன்றின் படி அரக்கோணம், அச்சிறுப்பாக்கம் வரை சென்னை மாநகரம் விரிவாக்கம் செய்ய பட உள்ளது. மேலும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் மூன்றாம் முழுமை திட்ட தொலைநோக்கு ஆவணம் தயாரிப்பு பற்றியும் கருத்தரங்கில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
2027 முதல் 2046-ஆம் வருடம் வரையிலான சென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் முடிவு எடுத்துள்ளதாகவும், மாநகர வளச்சிக்கு ஏற்ப மக்களுக்கு கட்டமைப்பு வசதிகள் செய்யும் நோக்கில் சென்னை மாநகர வளர்ச்சி குழுமம் முடிவு எடுத்திருப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். சென்னை விரிவாக்கம் தொடர்பாக பயிலரங்கில் அவர் பேசியதாவது;- சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தற்போது 1.2 கோடி பேர் வசிக்கின்றனர். ஆயிரக்கணக்கான புறம்போக்கு நிலங்கள் இருப்பதால் மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
மாநகரம் வளர்ச்சியின் கூடவே மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்றும் கூறியுள்ளார். திமுக ஆட்சியில் தான் சென்னை இரண்டாவது முழுமை திட்டம் தொடங்கப்பட்டது. சென்னை புறநகர் பகுதிகள் மற்றும் அனைத்து ஊராட்சிகளிலும் இருக்கும் அரசு புறம்போக்கு இடங்கள் கண்டறியப்பட்டு அரசு கட்டுப்பாட்டில் கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.