கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்த பெண் ஒருவர், அவருடைய கணவனால் இன்று அதிகாலை கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலையானவர் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீபிரியா என்றும், கொலையைச் செய்தவர் அவரது கணவர் பாலமுருகன் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தத் தம்பதியினருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆனால், கருத்து வேறுபாடுகள் காரணமாக பாலமுருகனிடமிருந்து பிரிந்து வந்த ஸ்ரீபிரியா, கோவைக்கு வந்து ஒரு தனியார் விடுதியில் தங்கி, அங்குள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், ஸ்ரீபிரியாவுக்கும், அவரது உறவினரான இசக்கிராஜா என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த இசக்கிராஜா, ஸ்ரீபிரியாவுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பாலமுருகனுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். இதைக் கண்ட பாலமுருகன் கடும் ஆத்திரம் அடைந்துள்ளார்.
அப்போது, ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்த பாலமுருகன், நேற்று இரவு நெல்லையில் இருந்து கோவைக்கு வந்துள்ளார். இன்று அதிகாலை ஸ்ரீபிரியா தங்கியிருந்த விடுதியின் வாசலில் அரிவாளுடன் காத்திருந்துள்ளார். அதிகாலையில் ஸ்ரீபிரியா விடுதியை விட்டு வெளியே வந்தபோது, பாலமுருகன் திடீரென அவரை வழிமறித்துத் தான் வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த ஸ்ரீபிரியா, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.
இந்தக் கொடூரச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக அங்கு விரைந்தனர். ஸ்ரீபிரியாவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த காவல்துறை, அங்கேயே இருந்த பாலமுருகனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உறவினருடன் ஏற்பட்ட பழக்கம் காரணமாக கணவரே மனைவியை கொடூரமாகக் கொலை செய்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read More : முதுநிலை ஆசிரியர் தேர்வில் அதிர்ச்சி..!! தமிழ் பாடத்தில் 85,000 பேர் தோல்வி..!! 20 மதிப்பெண் கூட வாங்கல..!!



