சென்னையை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர், ஐதராபாத்தில் சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை சேர்ந்தவர் பிரதாப் (34). என்ஜினீயரான இவர் கார் கம்பெனியில் வாகன வடிவமைப்பாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி சிந்தூரா ஐதராபாத்தில் உள்ள தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர்களுக்கு ஆதியா (4) என்ற மகள் இருந்தார். இந்நிலையில், சிந்தூரா பணியின் காரணமாக ஐதராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடி பெயர்ந்தனர். அங்கு சிந்தூரா அவரது குழந்தை ஆதியா மற்றும் பிரதாப்பின் தாய் ராஜாத்தி ஆகியோர் தங்கி இருந்தனர். பிரதாப் மட்டும் சென்னையில் தங்கி வேலை பார்த்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், பொங்கல் விடுமுறை காரணமாக பிரதாப் ஐதராபாத் சென்றுள்ளார். இதையடுத்து நேற்று முன்தினம் பிரதாப் தூக்கில் தொங்கிய நிலையில் ஒரு அறையிலும், மனைவி சிந்துரா, மகள் ஆதியா, தாய் ராஜாத்தி ஆகியோர் மற்ற அறைகளிலும் இறந்து கிடந்தனர்.

இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பிரதாப் அவரது மனைவியை சென்னைக்கு இடமாற்றம் செய்து வரும்படி கூறியதால் இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ளது. மேலும், பணப்பிரச்சனையிலும் குடும்பத்தார் தவித்து வந்துள்ளனர். இதையடுத்து, 4 பேரும் தற்கொலை செய்திருக்கலாம் என கருதப்பட்டது. இதுகுறித்து சிந்துராவின் தாயார் கூறுகையில், மூவரையும் கொலை செய்துவிட்டு பிரதாப் தற்கொலை செய்திருக்கிறார் என்று குற்றம்சாட்டினார். இந்நிலையில் பிரதாப் தனது மனைவி, மகளை முதலில் கொன்றுவிட்டு, பின்னர் தனது தாயாரை கழுத்தை நெரித்து கொலை செய்து பிறகு தற்கொலை செய்திருக்கலாம் என போலீசாரும் கருதுகின்றனர். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.