மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனம் சார்பில் கட்டப்பட்டு, தற்போது பழுதடைந்துள்ள ஒரு பழமையான இலவச மகப்பேறு மருத்துவமனையை நகராட்சி நிர்வாகம் இடிக்க திட்டமிட்டுள்ளதற்கு ஆதீன மடாதிபதி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்தக் கட்டடம் இடிக்கப்பட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்து பரபரப்பை கிளப்பியுள்ளார்.
மயிலாடுதுறை மயூரநாதர் வடக்கு வீதியில் அமைந்துள்ள இந்த மருத்துவமனைக்கு நீண்ட வரலாறு உண்டு. கடந்த 1943 ஆம் ஆண்டு, தருமபுரம் ஆதினத்தின் 24-வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள், தனது தாயாரின் நினைவாக ஆதீனத்துக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் இந்தப் பிரசவ மருத்துவமனையை கட்டினார்.
சுமார் 8 ஆண்டுகள் கட்டுமானப் பணிகள் நடைபெற்று, 1951 ஆம் ஆண்டு அப்போதைய தமிழ்நாடு முதல்வர் குமாரசாமி ராஜா அவர்களால் இந்த மருத்துவமனை திறந்து வைக்கப்பட்டது. அதன் பின்னர், ஆதீனம் இந்த மருத்துவமனையை நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்தது. காலப்போக்கில், நகராட்சி நிர்வாகத்தின் சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தால் மருத்துவமனை கட்டடம் பழுதடைந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த ஆதீனம், இந்தக் கட்டடத்தை தங்களிடமே திரும்ப ஒப்படைக்கக் கோரி, தற்போதைய 27-வது மடாதிபதி சார்பில் நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்திற்கு பதில் கிடைக்காத நிலையில், சமீபத்தில் அந்தக் கட்டடத்தை இடிக்கப் போவதாக தகவல் பரவியது.
அப்போதும்கூட, ஆதீனம் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்ததை தொடர்ந்து, கட்டடம் இடிப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த கட்டடத்தை இடிப்பதற்காக பூமிபூஜை போடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதைக் கேட்டு ஆத்திரமடைந்த தருமபுரம் ஆதீனம், தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “முன்னரே இலவச மகப்பேறு மருத்துவமனையை இடிக்கப் போவதாக தகவல் வந்தபோது, முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு சென்று அது நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் பூமி பூஜை போடுவதாக அறிந்தோம். நான் வெளியூர் நிகழ்வில் இருப்பதால், இந்த கட்டடம் இடிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையென்றால், உயிர் போகும் வரை உண்ணாவிரதம் இருந்து முன்னோர்கள் கட்டியதைக் காப்போம்” என்று அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.



