மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள தாராவி பகுதியைச் சேர்ந்தவர் ரஹ்மத் அலி சவுக்த் அலி அன்சாரி. இவர் ஜவுளி தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தாஹிரா பானோ. இவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில், அன்சாரிக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. அந்த பெண் அன்சாரியின் உறவுக்காரப் பெண் ஆவார். கடந்த 3 ஆண்டுகளாக இந்த கள்ள உறவு நீடித்த நிலையில், அந்த பெண்ணை திருமணம் செய்ய விரும்பியுள்ளார். அந்த பெண்ணோ மனைவியும் குழந்தையும் இருக்கக் கூடாது. அவர்கள் இல்லை என்றால் தான் உன்னை திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார்.
எனவே, தனது மனைவி மற்றும் மகனை கொலை செய்ய அன்சாரி முடிவு செய்தார். முதலில் குழந்தையை கொல்ல சதித்திட்டம் தீட்டி கடந்த செவ்வாய்கிழமை அன்று தனது 2 வயது குழந்தையை வெளியே கூட்டி சென்றுள்ளார். உடன் சில உறவினர்களும் வந்துள்ளனர். முதலில் உறவினர்களுடன் சேர்ந்து நேரம்போவது போல் நடித்து பின்னர் குழந்தையை அருகே உள்ள மைதிலி நதிக்கு தூக்கி சென்றுள்ளார். அங்கு நீரில் மூழ்க வைத்து குழந்தையை கொடூரமாக கொலை செய்துள்ளார். குழந்தையின் சடலத்தை பிளாஸ்டிக் பையில் வைத்து நதியில் தூக்கி வீசியுள்ளார். பின்னர் குழந்தையை நான் பார்க்கவில்லை காணாமல் போய்விட்டான் என நாடகமாடியுள்ளார்.
இருப்பினும் மனைவி தஹீராவுக்கு கணவர் மீது சந்தேகம் எழவே காவல்துறையிடம் புகார் அளித்தார். அதன்படி காவல்துறை நடத்திய விசாரணையில், கடைசியாக உண்மையை ஒப்புக்கொண்டார் அன்சாரி. இதையடுத்து, அவர் மீது கொலை, கடத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அன்சாரியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.