பாமக நிறுவனர் ராமதாஸிடம், கட்சியின் தலைவர் அன்புமணி பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். இதனால், இருவரிடையே ஏற்பட்ட மோதல் போக்கு முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பாமகவின் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையில் அதிகார மோதல் உச்சத்தில் இருக்கிறது. ஏப்ரல் மாதத்தில் அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கிய ராமதாஸ், அடுத்தடுத்து அவர் மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன் வைத்து வந்தார். தலைமை பண்பு கிடையாது, கூட்டணி குறித்து முடிவு சரியில்லை, வாரிசு அரசியல் என்று ஏராளமான கடுமையாக விமர்சனத்தை வைத்தார்.
அதுமட்டுமல்லாமல் பாமகவில் அன்புமணிக்கு ஆதரவாக இருந்த நிர்வாகிகளை அடுத்தடுத்து நீக்கி புதிய நிர்வாகிகளை நியமனம் செய்தார். இன்னொரு பக்கம் அன்புமணி, மாநில மற்றும் மாவட்ட அளவிலான நிர்வாகிகளை சந்தித்து தனது ஆதரவை நிரூபிக்க தொடங்கினார். அந்த வகையில் இன்று அன்புமணி தலைமையில் திருவள்ளூரில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தொகுதி வாரியாக கட்சியை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
பாமகவில் அதிகார மோதல் முற்றிவரும் நிலையில் இன்று நடைபெற்ற பாமக ஆலோசனை கூட்டத்தில் அன்புமணி மன்னிப்பு கேட்டார். அவர் பேசுகையில், அப்பா என்னை மன்னித்துவிடுங்கள்.. என் மீது கோபமிருந்தால் தயவு செய்து என்னை மன்னித்துவிடுங்கள்.. உங்களுக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதால் தான் அரசியலில் இருந்து ஓய்வெடுக்க சொன்னேன். எனக்கு நீங்கள் ஆணையிடுங்கள்.. மகனாக.. தலைவராக அதை செய்கிறேன். நீங்கள் மாநில தலைவர் அல்ல.. நீங்கள் தான் தேசிய தலைவர்..
ஐயா என்ன சொன்னாலும் நான் செய்ய தயாராக இருக்கிறேன் என ராமதாஸிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரினார். ராமதாஸை தேசிய தலைவர் என மோடி அழைத்ததாகவும் குறிப்பிட்டார். மேலும் ஐயா நீங்கள் 100 ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும்.. நல்ல உடல் நலத்தோடு இருக்க வேண்டும். எதற்கும் டென்சன் ஆக வேண்டாம் என்றார். பாமகவில் அதிகார மோதல் முற்றிவரும் நிலையில் திருவள்ளூர் மாவட்ட பொதுக்குழுவில் அன்புமணி மன்னிப்பு கோரினார். இதனால், இருவரிடையே ஏற்பட்ட மோதல் போக்கு முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.