சேலம் அருகே இளம்பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட தந்தையையும், இரண்டாவது மனைவியுமான சித்தியையும் தலையை துண்டித்து கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் இடங்கணச்சாலை கோனேரிப்பட்டி பூசாரிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி (47), கூலித் தொழிலாளி. இவரது முதல் மனைவி ஜெயந்தி, சில ஆண்டுகளாக அவரை விட்டு பிரிந்து, சேலத்தில் தனியாக வசித்து வருகிறார். அவர்களுக்கு ஆகாஷ் (23) என்ற மகன் உள்ளார். இருவரும் பிரிந்த பிறகு பழனிசாமி, ஜெயலட்சுமி (38) என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ஜெயலட்சுமிக்கு, முதல் திருமணத்தில் பெற்ற 18 வயது மகளும் உடனிருந்தார்.
இந்நிலையில், கடந்த ஐந்து நாட்களாக பழனிசாமி மற்றும் ஜெயலட்சுமி இருவரும் மாயமானதாக அவரது உறவினர்கள் மகுடஞ்சாவடி போலீசாரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, மகன் ஆகாஷிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், தனது தந்தையும் சித்தியும் தன்னை மிரட்டி வந்ததாகவும், கடந்த 15ஆம் தேதி இரவு இருவரையும் கழுத்தை வெட்டி கொன்றதாகவும், பின்னர் அவர்களது உடலை துண்டுத் துண்டாக வெட்டி, மூன்று சாக்கு மூட்டைகளில் கட்டி, இரண்டு ஏரிகளில் தூக்கி வீசியதாகவும் கூறியுள்ளார். இதனைக் கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து, ஏகாபுரம் ஏரியிலும், தாழையூர் ஏரியிலும் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, மூன்று சாக்கு மூட்டைகள் மீட்கப்பட்டன. அவற்றில் பழனிசாமி மற்றும் ஜெயலட்சுமியின் தலை, கை, கால் உள்ளிட்ட உடல் பாகங்கள் இருந்தது உறுதி செய்யப்பட்டது. பின்னர், உடல்கள் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
விசாரணையின் போது, ஜெயலட்சுமியின் 18 வயது மகளிடம் பழனிசாமி தகாத முறையில் நடந்துள்ளார். இதற்கு ஜெயலட்சுமியும் உடந்தையாக இருந்துள்ளார். இதனால் கோபம் அடைந்த ஆகாஷ், இருவரையும் கொலை செய்ததாக கூறியுள்ளார். கொலை நிகழ்ந்தபோது அந்த இளம்பெண்ணும் அருகில் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த பெண்ணையும் போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.