இந்தியாவின் முதல் சர்வதேச சொகுசு கப்பல் சேவை சென்னையில் இருந்து இலங்கைக்கு தொடங்கியுள்ளது. இந்த கப்பலில் என்னென்ன வசதிகள் இருக்கின்றன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மத்திய அரசின் சாகர்மாலா திட்டத்தின் கீழ் சென்னை துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பலை இயக்க தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. எம்.பி. எம்பிரஸ் என்ற பெயரில் இயங்கும் இந்த சொகுசு கப்பலை மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் நேற்றைய தினம் தொடங்கி வைத்தார். இந்த கப்பல் சென்னையிலிருந்து இலங்கையில் உள்ள ஹம்பன்தோட்டா, திரிகோணமலை மற்றும் காங்கேசன் ஆகிய 3 துறைமுகங்களை இணைக்கும் வகையில் இயக்கப்படுகிறது.
இந்த சொகுசு கப்பல் நவீன கட்டமைப்பில் 11 மாடிகளுடன் வண்ண விளக்கொளியில் நட்சத்திர விடுதி போல கட்டமைக்கப்பட்டுள்ளது. இது பார்ப்பதற்கு பிரம்மாண்டமாக உள்ளது. இந்த கப்பலில் 1600 பயணிகள் வரை செல்ல முடியும். இங்கு ஏராளமான அறைகள் உள்ளன. அறைகளுக்குள் இருந்த வாறே கடலின் அழகை ரசிக்கும் வகையில் கண்ணாடி ஜன்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன. கப்பலில் தனிமையில் பேசிக் கொள்ள ஆங்காங்கே பிரைவசி இருக்கை வசதிகள் உள்ளன.
இந்த கப்பலின் விசேஷம் என்னவென்றால் இங்கு எந்த இடத்தில் வேண்டுமானாலும் இருந்து கொண்டு கண்ணாடி வழியாக கடலை பார்க்கலாம். கப்பலின் மேல் பகுதியில் ஒரு நீச்சல் குளம் இருக்கிறது. இதில் ஜாலியாக குளித்து கும்மாளம் போடலாம். உணவு பிரியர்களின் சுவை அரும்புகளை தூண்டும் வகையில் உணவுகள் பரிமாறப்படுகின்றன. நான் வெஜ், வெஜ் என இரு வகையான உணவுகளும் பரிமாறப்படுகிறது. இங்கு மிகப்பெரிய விளையாட்டு அரங்கம் உள்ளது. ஒரு மாலுக்குள் நுழைந்தால் என்னென்ன வசதிகள் கிடைக்குமோ அதெல்லாம் இங்கு கிடைக்கும்.
மாலுக்கு போனால் துணி, நகை, பொம்மைகளை வாங்கலாம். அது போல் கப்பலில் வாங்க முடியுமா என கேட்காதீர்கள். நிச்சயம் இங்கும் வாங்க முடியும். கப்பல் பயணத்தின் போது பயணிகள் ஷாப்பிங் செய்ய ஏதுவாக பொம்மைகள், ஆடைகள், நகைகளை வாங்கிக் கொள்ளலாம். இங்கு இசை அரங்குகளும் உள்ளன. இதை பார்க்கும் பயணிகளும் இத்தனை நாள் பாத்ரூமுக்குள் பாடிக் கொண்டிருந்த நிலையில், தற்போது இந்த கப்பலில் பாடகர்களாக மாறி பாடி வருகிறார்கள்.
இந்த கப்பலில் ஸ்பாக்கள், பப்புகள், குழந்தைகள் விளையாடும் பகுதிகள், தியேட்டர்கள் உள்ளிட்ட வசதிகளும் இருக்கின்றன. மும்பையில் ரூ.5,000 கோடியில் சர்வதேச கப்பல் டெர்மினல்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த கப்பல் மூலம் அடுத்த 4 மாதங்களில் 50,000 பயணிகள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்லக் கூடும் என கூறப்படுகிறது. கார்டிலியா நிறுவனத்தின் கப்பல் கொச்சி, கோவா, மும்பை மற்றும் லட்சத்தீவுகள் பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது. சென்னையிலிருந்து இலங்கை செல்ல இநத் சொகுசு கப்பலில் 4 நாட்களுக்கு ரூ.85 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.