தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், வட மாவட்டங்களின் அரசியல் சமன்பாடுகள் அதிரடியாக மாற தொடங்கியுள்ளன. பாமகவுக்குள் தலைமைத்துவ போட்டி நிலவி வருவதாக கூறப்படும் சூழலில், அதிமுக – பாமக கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ நகர்வுகள் தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
குறிப்பாக, அன்புமணி ராமதாஸ் தரப்பு அதிமுகவுடன் கைகோர்த்திருப்பது, மாற்றுக் கட்சிகளில் உள்ள நிர்வாகிகளிடையே ஒருவித சலனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அரசியல் மாற்றத்தின் ஒரு பகுதியாக, தமிழக வாழ்வுரிமை கட்சியில் (தவாக) இருந்து விலகிய முக்கிய நிர்வாகியான கள்ளிப்பட்டி ஆறுமுகம், தனது 5,000 ஆதரவாளர்களுடன் மீண்டும் பாமகவில் இணைந்துள்ளார்.
கடலூரில் நேற்று இரவு நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில், அன்புமணி ராமதாஸ் முன்னிலையில் இந்த இணைப்பு விழா நடைபெற்றது. பாமகவில் இருந்து பிரிந்து சென்ற பண்ருட்டி வேல்முருகன் தமிழக வாழ்வுரிமை கட்சியைத் தொடங்கியபோது, அக்கட்சியை வளர்ப்பதில் முக்கியத் தூணாகச் செயல்பட்டவர் கள்ளிப்பட்டி ஆறுமுகம் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு, கள்ளிப்பட்டி ஆறுமுகத்தின் இந்த வெளியேற்றம் ஒரு பலத்த பின்னடைவாக பார்க்கப்படுகிறது. தனது பலமான ஆதரவாளர்களுடன் அவர் மீண்டும் தாய் கழகத்திற்கே திரும்பியுள்ளது, கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாமக-வின் கரத்தை வலுப்படுத்தியுள்ளது. இபிஎஸ் – அன்புமணி இடையேயான புதிய கூட்டணி ஒருபுறம் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், கட்சியின் நிறுவனரான டாக்டர் ராமதாஸின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்னவாக இருக்கும் என்பதை அறிய ஒட்டுமொத்த தமிழக அரசியலும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறது.
Read More : உங்கள் ரேஷன் கார்டு Active ஆக இருக்கிறதா..? உடனே செக் பண்ணுங்க..!! இல்லைனா ரூ.3,000 பணம் கிடைக்காது..!!



