தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் சுட்டெரிக்க தொடங்கியுள்ள நிலையில், பச்சிளம் குழந்தைகளின் உடல்நலனைப் பாதுகாக்கும் நோக்கில் தமிழக அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு வரும் மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை அளித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அதிகாரப்பூர்வ உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் வெப்ப அலைகளின் தாக்கம் உச்சத்தில் இருப்பதால், அங்கன்வாடிக்கு வரும் சிறு குழந்தைகள் உடல்நலப் பாதிப்புகளுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, வரும் மே 1-ம் தேதி முதல் மே 31-ம் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு அனைத்து அங்கன்வாடி பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அரசாணை மாவட்ட வாரியாக உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
வெயிலின் கொடுமையால் குழந்தைகள் சோர்வடைவதை தவிர்க்க அரசு எடுத்துள்ள இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்து பெற்றோர்கள் வரவேற்றுள்ளனர். “குட்டிப் பட்டாளங்களே, உங்க சம்மர் ஹாலிடேஸ் கொண்டாட்டத்துக்குத் தயாராகுங்கள்” என்று சொல்லும் வகையில் அமைந்துள்ள இந்த அறிவிப்பு, சுட்டிப் குழந்தைகளுக்குப் பெரும் உற்சாகத்தை தந்துள்ளதாக தெரிகிறது.
விடுமுறை காலத்தில் குழந்தைகளை நேரடியாக வெயிலில் விளையாட அனுமதிக்க வேண்டாம் என்றும், அவர்களுக்குப் போதிய அளவு நீர்ச்சத்து மிகுந்த ஆகாரங்களை வழங்குமாறும் சுகாதாரத் துறை பெற்றோர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. ஜூன் மாதம் வெயிலின் தாக்கம் குறைந்த பிறகு மீண்டும் மையங்கள் வழக்கம் போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : ஒரு ரூபாய் கூட செலவின்றி கேஸ் சிலிண்டர் கனெக்ஷன்..!! மத்திய அரசின் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி..?



