தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், ஆளும் திமுக தலைமையிலான கூட்டணியில் புதிய திருப்பமாக ‘நமது மக்கள் முன்னேற்றக் கழகம்’ (நமமுக) இணைந்துள்ளது. தேர்தல் வியூகங்கள் வகுக்கப்பட்டு வரும் சூழலில், திமுக கூட்டணியின் பலத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் இந்த அரசியல் நகர்வு அமைந்துள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற சந்திப்பில், நமமுக நிறுவனத் தலைவர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேசினர். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்குத் தங்களது நிபந்தனையற்ற மற்றும் முழுமையான ஆதரவை வழங்குவதாக அவர்கள் முறைப்படி அறிவித்தனர். இந்த முக்கிய நிகழ்வின் போது திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு மற்றும் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் உடனிருந்தனர்.
ஏற்கனவே காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஐயுஎம்எல் மற்றும் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட 16-க்கும் மேற்பட்ட கட்சிகள் திமுக கூட்டணியில் நீடித்து வருகின்றன. இந்நிலையில், நமமுக-வின் வருகை கூட்டணியை மேலும் வலுப்படுத்தியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
முன்னதாக, கடந்த செப்டம்பர் 2025-இல் மதுரையில் தனது கட்சிக் கொடியை அறிமுகம் செய்த ஜெகநாத் மிஸ்ரா, 25 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போவதாக தெரிவித்திருந்தார். ஆனால், தற்போதைய அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு, திமுக கூட்டணியுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்க அவர் முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



