பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025 இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது. சட்டமன்றத் தேர்தலுக்கான ஒட்டுமொத்த வாக்குப்பதிவு 66.91 சதவீதமாக இருந்தது, இது இதுவரை இல்லாத அளவுக்கு பதிவான அதிக சதவீதமாகும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
நவம்பர் 6 ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது, 65.08 சதவீத வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. நவம்பர் 11 ஆம் தேதி நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் முடிவடைந்துள்ளது, வாக்குப்பதிவு 68.67 சதவீதமாக உள்ளது. பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் என்.டி.ஏ கூட்டணி வெற்றி பெறும் என்று கணிந்திருந்தன..
இந்த நிலையில் பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன.. வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஆரம்பத்தில் என்.டி.ஏ கூட்டணிக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையே நெருக்கமான போட்டியாக இருந்தது. ஆனால் ஒருகட்டத்தில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி முன்னிலை பெற தொடங்கியது.. எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சற்று பின் தங்கியது.
காலை 11 மணி நிலவரம்
பாஜக கூட்டணி : 192 இடங்களில் முன்னிலை
காங். கூட்டணி : 47 இடங்களில் முன்னிலை
ஜன் சுராஜ் : 0
243 இடங்களைக் கொண்ட பீகார் சட்டமன்றத்தில் பெரும்பான்மை உடன் ஆட்சி அமைக்க 122 இடங்கள் தேவை. பீகாரில் ஆளும் NDA கூட்டணி அமோக வெற்றி பெறும் நிலையில் உள்ளது, கூட்டணி 192 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.. இதன் மூலம் பாஜக கூட்டணி பெரும்பான்மை உடன் ஆட்சியமைக்க தயாராகி வருகிறது.. மறுபுறம் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி 50 தொகுதிகளை நெருங்கவே போராடி வருகிறது..



