அமைச்சர் துரைமுருகன் வீட்டிற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக முக்கியப் பிரமுகர்களின் வீடுகளைக் குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கியப் புள்ளிகள் இந்தப் போலி மிரட்டல்களால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
மேலும் தலைமை செயலகம், உயர்நீதிமன்றம், வானிலை மைய அலுவலகம், அதிமுக தலைமை அலுவலகம் முக்கிய இடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.. எடப்பாடி பழனிசாமி, விஜய், சீமான், ஐஏஎஸ் அதிகாரிகள் என முக்கிய பிரமுகர்களின் வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. அந்த வகையில் நேற்று இசையமைப்பாளர் இளையராஜா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.. பெரும்பாலும் இமெயில் மூலம் விடுக்கப்படும் இந்த மிரட்டல்களை தொடர்ந்து சம்மந்தப்பட்ட இடங்களில் காவல்துறையினர், வெடிகுண்டு நிபுணர்கள் ஆகியோர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.. சோதனையின் முடிவில் அவை வெறும் புரளி என்பது உறுதியாகி வருகிறது.
இந்த நிலையில் அமைச்சர் துரைமுருகன் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வேலூர் காட்பாடி, காந்தி நகரில் உள்ள அவரின் வீட்டிற்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.. இ மெயில் மூலமாக வந்த வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை மேற்கொண்டனர்.. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேல் சோதனை நடந்த நிலையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்..