தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்து வருவதுடன், அவர்களின் விசைப்படகுகளைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கையும் தொடர்வதால், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நாகப்பட்டினம் மீனவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 14 தமிழக மீனவர்கள், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மீனவர்களைக் கைது செய்ததோடு மட்டுமல்லாமல், அவர்கள் பயன்படுத்திய 2 விசைப்படகுகள், வலைகள் மற்றும் மீன்களையும் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறை கடற்படை முகாமுக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். கடந்த மாதம் 9ஆம் தேதி 47 மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்த நிலையில், தொடர்ந்து நடைபெறும் இந்தக் கைது நடவடிக்கையால், மீன்பிடித் தொழிலை நம்பியுள்ள நாகப்பட்டினம் மீனவர்களின் குடும்பங்கள் கவலையும் அச்சமும் அடைந்துள்ளனர். மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு, கைது செய்யப்பட்ட மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவச் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.



