தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பாமக இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் உட்கட்சிப் பூசலில் சிக்கித் தவிக்கிறது. தந்தை டாக்டர் ராமதாஸ் மற்றும் மகன் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இடையிலான இந்த அதிகாரப் போர், தற்போது நீதிமன்றப் படிகளைத் தாண்டி கட்சியின் சின்னத்தையே முடக்கும் நிலைக்குச் சென்றுள்ளது. கட்சியின் தலைமை அதிகாரம் யார் கையில் என்பதில் நீடிக்கும் குழப்பம், பாமக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மோதலின் தொடக்கப் புள்ளியாக, ராமதாஸ் தனது பேரன் முகுந்தனை இளைஞரணி தலைவராக்கியது அமைந்தது. இதனை அன்புமணி பகிரங்கமாக எதிர்த்ததைத் தொடர்ந்து, ராமதாஸின் மகள் காந்திமதி கட்சியின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். அடுத்தக்கட்டமாக, அன்புமணியைத் தலைவர் பதவியிலிருந்து ராமதாஸ் நீக்க, தேர்தல் ஆணையமோ அன்புமணிக்கே சாதகமாகத் தீர்ப்பளித்தது.
இந்த விவகாரம் டெல்லி உயர் நீதிமன்றத்திற்குச் சென்றபோது, “தேர்தல் நேரத்தில் வேட்புமனுவில் கையெழுத்திடுவது யார் என்பதில் தெளிவில்லை” என்று குறிப்பிட்ட நீதிமன்றம், பாமகவின் அடையாளமான ‘மாம்பழம்’ சின்னத்தை அதிரடியாக முடக்கி உத்தரவிட்டுள்ளது. இது அக்கட்சியின் தேர்தல் வியூகத்தைப் பலவீனப்படுத்தியுள்ளது.
கட்சியின் சின்னம் முடங்கியுள்ள இக்கட்டான சூழலிலும், உட்கட்சி மோதல் குறையவில்லை. கட்சியின் மூத்த தலைவரும், ராமதாஸின் நம்பிக்கைக்குரியவருமான ஜி.கே.மணிக்கு அன்புமணி தரப்பு தற்போது விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கட்சித் தலைமைக்கு எதிராகப் பேசியதாகக் கூறப்படும் புகாருக்கு, ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜி.கே.மணி இதற்கு விளக்கம் அளித்தால், அது அன்புமணியைத் தலைவராக ஏற்றுக்கொள்வதாக அமையும். ஒருவேளை அவர் விளக்கம் அளிக்கத் தவறினால், அதிமுகவில் செங்கோட்டையன் நீக்கப்பட்டதைப் போல, பாமகவிலிருந்து ஜி.கே.மணி கட்டம் கட்டப்படலாம் என்று அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன.
சொந்தக் குடும்பத்திற்குள்ளேயே ஏற்பட்டுள்ள இந்த ஈகோ மோதலால், கூட்டணிப் பேச்சுவார்த்தை மற்றும் வேட்பாளர் தேர்வு என எதிலும் பாமகவால் கவனம் செலுத்த முடியாமல் உள்ளது. சின்னம் முடக்கப்பட்டுள்ளதால், சுயேச்சை சின்னத்தில் போட்டியிட வேண்டிய கட்டாயம் ஏற்படுமோ என்ற அச்சம் தொண்டர்களிடம் எழுந்துள்ளது. வரும் நாட்களில் ஜி.கே.மணி எடுக்கப்போகும் முடிவு, பாமகவின் அடுத்தகட்ட நகர்வைத் தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read More : எண்ணெய் தேய்த்து குளிக்க இந்த நாள் மட்டுமே சிறந்தது..!! நீண்ட ஆயுள் பெற இதை பண்ணுங்க..!!



