விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியின் தற்போதைய எம்.பி-யும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான மாணிக்கம் தாகூர், இனிவரும் காலங்களில் எம்பி மற்றும் எம்எல்ஏ தேர்தல்களில் போட்டியிட போவதில்லை என்று அறிவித்துள்ளார். தொகுதிப் பங்கீடு மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பான விவாதங்கள் தீவிரமடைந்து வரும் வேளையில், அவரது இந்த அறிவிப்பு காங்கிரஸ் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாகவே, ஆட்சி அதிகாரத்தில் காங்கிரஸிற்குப் பங்கு வேண்டும் என்றும், திமுக தலைமை தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை விரைந்து தொடங்க வேண்டும் என்றும் மாணிக்கம் தாகூர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இந்நிலையில், “திமுகவின் தயவில்தான் காங்கிரஸ் வெற்றி பெறுகிறது” என்று திமுக தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தங்களின் உழைப்பை சிறுமைப்படுத்தும் இத்தகைய பேச்சுகளால் ஏற்பட்ட அதிருப்தியே, மாணிக்கம் தாகூரை தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்கும் முடிவை நோக்கித் தள்ளியுள்ளதாக தெரிகிறது.
ஒரு மூத்த தலைவர் தனது சொந்த கூட்டணிக்கு எதிராக வெளிப்படையாக இத்தகைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருப்பது, வரவிருக்கும் தேர்தல்களில் ‘இந்தியா’ கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டில் பெரும் சிக்கல்களை உருவாக்கக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
Read More : தவெக தலைவர் விஜய்க்கு திடீரென ஆதரவு தெரிவித்த கி.வீரமணி..!! அதிர்ச்சியில் திமுக..!!



