தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரின் அத்துமீறல்கள் தொடர்கதையாகி வரும் நிலையில், மீண்டும் 9 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது கடலோரக் கிராமங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த இந்த மீனவர்கள், பாக் நீரிணைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை சிறைபிடித்தனர்.
மீனவர்களின் இரண்டு விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ள இலங்கை கடற்படை, கைதான 9 பேரையும் மேலதிக விசாரணைக்காக காரைநகர் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளது. நேற்று முன்தினம் தான் நெடுந்தீவு அருகே காரைக்காலைச் சேர்ந்த 11 மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அடுத்த 24 மணி நேரத்திற்குள் மீண்டும் ஒரு கைது நடவடிக்கை அரங்கேறியிருப்பது தமிழக மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ள மீனவ அமைப்புகள், “நாள்தோறும் கடலுக்குச் செல்லும் மீனவர்கள் உயிருக்கு அஞ்சியே தொழில் செய்ய வேண்டியுள்ளது. இலங்கை கடற்படையின் இந்தத் தொடர் கைது நடவடிக்கைகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து ஒரு நிரந்தரத் தீர்வை எட்ட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளனர்.



