கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது, கட்டுக்கடங்காத மக்கள் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயரம் நாட்டையே உலுக்கியது. உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் இந்த வழக்கை சிபிஐ கையில் எடுத்துள்ள நிலையில், கடந்த 12-ம் தேதி அக்கட்சியின் தலைவர் விஜய் டெல்லியில் விசாரணைக்கு ஆஜரானார்.
அன்றைய தினம் விஜய்யிடம் பல்வேறு கேள்விகளை அதிகாரிகள் எழுப்பி இருந்தது.. அவரது பதில்கள் அனைத்தும் எழுத்துப்பூர்வமாகவும், குரல் பதிவாகவும் பதிவு செய்யப்பட்டன. பொங்கல் பண்டிகையை ஒட்டி விஜய், விசாரணைக்கு விலக்கு கோரிய நிலையில் அதனை சிபிஐ ஏற்றுக்கொண்டது.. அதன்படி விஜய் இன்று ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.. அதன்படி இன்று 2-வது முறையாக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார்.. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது..
இந்த நிலையில் விஜய்யிடம் 2-வது நாளாக நடைபெற்ற விசாரணை நிறைவடைந்தது.. காலை 11 மணியில் இருந்து 5 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த விசாரணை முடிவடைந்தது.. இந்த விசாரணையில் 7 மணி நேரம் தாமதமானது ஏன்? கூட்ட நெரிசல் பற்றி தெரியாதா உள்ளிட்ட கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் எழுப்பினர்..
கூட்டத்தை கட்டுப்படுத்த தவறியது காவல்துறை தான், போலீசாரின் வழிகாட்டுதல்களை பின்பற்றியே வாகனத்தை இயக்கியதாகவும் விஜய் கூறியுள்ளார்.. அதாவது வாகனம் எங்கு, எப்படி செல்ல வேண்டும் என காவல்துறை வழங்கிய வழிகாட்டுதலை பின்பற்றி தான் நடந்து கொண்டோம் என விஜய் பதிலளித்துள்ளார்.
கடந்த முறை விசாரணையின் போது கரூர் கூட்ட நெரிசலில் சதி நடந்திருப்பதாகவும், சிபிஐ தான் அதனை கண்டுபிடித்து தர வேண்டும் என்று விஜய் கூறியிருந்தார்.. தற்போது மீண்டும் காவல்துறை மீது புதிய குற்றச்சாட்டை விஜய் சுமத்தி உள்ளார்..
இந்த நிலையில் பிப்ரவரி முதல் 2-வது வாரத்தில் முதல்கட்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சிபிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த குற்றப்பத்திரிகையில் விஜய் பெயரும் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. ஒருவேளை விஜய் பெயர் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டால் அது விஜய்க்கு பெரும் பின்னடைவாக இருக்கும்.. ஏனெனில், அவர் குற்றம் செய்திருக்கலாம் என்று விசாரணை அமைப்புக்கு போதுமான ஆதாரம் கிடைத்துள்ளது என்று அர்த்தம்.. அந்த நபருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.. குற்றப்பத்திரிகையில் பெயர் சேர்க்கப்படும் பட்சத்தில் அவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படலாம் தேவைப்படும் பட்சத்தில் கைது செய்யக்கூட வாய்ப்புள்ளது.



