பொதுவாக, அனைத்து வங்கிகளிலும் ஒவ்வொரு வங்கிக் கணக்கிற்கும் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்க வேண்டும் என்பது வங்கியின் விதிமுறைகள் ஆகும். அப்படி, பராமரிக்காத பட்சத்தில் அதற்கு தனி அபராதம் விதிக்கப்படும். இந்த அபராதம் வங்கியை பொறுத்து மாறுபடும். இந்நிலையில் தான், தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை பொதுத்துறை வங்கியான கனரா வங்கி வெளியிட்டுள்ளது.
அதன்படி, இனி, கனரா வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள், குறைந்தபட்ச இருப்புத் தொகையை (மினிமம் பேலன்ஸ்) வைத்திருக்க வேண்டியதில்லை. மேலும், வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காவிட்டாலும், அதற்கென தனி அபராதம் விதிக்கப்படாது என வங்கி அறிவித்துள்ளது. இந்த புதிய விதிமுறை அமலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை வெளியிடும் வரை, கனரா வங்கியின் நகர்ப்புற கிளைகளில் குறைந்தபட்சம் ரூ.2,000, இரண்டாம் தர நகர்ப்புறங்களில் ரூ.1,000, மற்றும் கிராமப்புற கிளைகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் ரூ.500 என குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்க வேண்டும் என்ற விதி இருந்தது. ஆனால், தற்போது அந்த விதி தளர்த்தப்பட்டுள்ளது.
இதுவரை இருந்து வந்த நடைமுறை சாமானிய மக்களுக்கு பெரும் சுமையாக இருந்தது. குறிப்பாக, மகளிர் உரிமைத்தொகை, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை போன்ற அரசு நலத்திட்ட உதவிகளைப் பெறும் சாமானிய மக்களும் மினிமம் பேலன்ஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு வந்தனர். வங்கிக் கணக்கில் வரும் பணத்தை அன்றாடத் தேவைகளுக்குப் பயன்படுத்திய பிறகு, மினிமம் பேலன்ஸ் பராமரிக்காவிட்டால், அபராதம் விதிக்கப்பட்டு அடுத்த முறை உதவித்தொகை வங்கிக் கணக்கில் வரும் போது, இதிலிருந்து அபராதத் தொகை கழிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த சிரமங்களை உணர்ந்த கனரா வங்கி, மினிமம் பேலன்ஸ் மற்றும் அபராதம் விதிக்கும் நடைமுறையை முழுமையாக நீக்கிவியுள்ளது. இந்த அறிவிப்பு, கனரா வங்கியின் வாடிக்கையாளர்கள் மத்தியில் மட்டுமின்றி, சாமானிய மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பொதுத்துறை வங்கிகளில் இந்த நடைமுறையை ரத்து செய்யும் முதல் வங்கியாக கனரா வங்கி மாறியுள்ளது. எனவே, மற்ற வங்கிகளும் இதுபோன்ற ஒரு அறிவிப்பை வெளியிட வேண்டுமென வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Read More : மாணவர்களே கவலைப்படாதீங்க..!! அடுத்த வாரம் மீண்டும் தொடர் விடுமுறை வருகிறது..!! எப்போது தெரியுமா..?