தமிழகத்தில் கொரோனா நடவடிக்கைகளை துரிதப்படுத்த அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் மருத்துவக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
சீனாவில் பி.எப்.7 என்ற புதிய வகை வைரஸ் வேகமாக பரவி வருவதால், கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. சர்வதேச விமான நிலையங்களில் ரேண்டம் பரிசோதனை செய்வது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடிக்கிவிடப்பட்டுள்ள நிலையில், பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், தமிழகத்தில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில் கடந்த 22ஆம் தேதி கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் முதல்வர்கள் ஆகியோருக்கு தமிழக மருத்துவ கல்வி இயக்குனரகம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். அடுத்த 6 மாதத்துக்கு தேவையான கொரோனா பரிசோதனை கருவிகளை முன்கூட்டியே வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா வார்டுகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். கொரோனா தடுப்பூசி மையங்கள் முழு நேரமும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்சிஜன் சிலிண்டர்கள் அவசர கால பயன்பாட்டிற்கு தயாராக வைக்க வேண்டும். N95 முகக்கவசம், பிபிஇ கிட், அத்தியாவசிய மருந்துகள் கையிருப்பை மதிப்பீடு செய்ய வேண்டும். வெண்டிலெட்டர்கள், சிபிஏபி கருவி, ஆக்சிஜன் செலுத்தும் கருவி உள்ளிட்டவை தயாராக உள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.