அதிமுக நாடாளுமன்ற முன்னாள் எம்பி ராதாகிருஷ்ணன், மாரடைப்பால் காலமானார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வடபட்டியை சேர்ந்தவர் டி.ராதாகிருஷ்ணன் (வயது 67). இவரது தந்தை தர்மர். தாயார் சின்னதாயம்மாள். டி.ராதாகிருஷ்ணன், ஒருங்கிணைந்த விருதுநகர் மாவட்ட அதிமுக செயலாளராக பணியாற்றி உள்ளார். சிவகாசி யூனியன் தலைவராக 1986ஆம் ஆண்டு முதல் 1991ஆம் ஆண்டு வரையும், 1996 முதல் 2001 வரையும், 2011 முதல் 2014 வரை என 3 முறை இருந்துள்ளார். பின்னர் 2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது அதிமுக சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவருக்கு இரண்டு மனைவியும், ஒரு மகனும், 3 மகள்களும் உள்ளனர். இதற்கிடையே, திடீர் மாரடைப்பால் ராதாகிருஷ்ணன் நேற்று காலமானார். இவரது மறைவுக்கு அதிமுக நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மறைந்த ராதாகிருஷ்ணன் உடலுக்கு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும், அவரது மறைவுக்கு வி.கே.சசிகலா ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “ராதாகிருஷ்ணன் காலமானார் என்ற செய்திக் கேட்டு மிகவும் வருத்தமுற்றேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.