தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் சேர்க்கும் முயற்சியில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். அந்த வகையில் அதிமுகவில் ஏற்பட்ட அதிருப்தியால் முக்கிய அதிமுக புள்ளிகள் சமீப காலமாக திமுகவில் இணைந்து வருகின்றனர்..
முன்னாள் எம்.பிக்கள் அன்வர் ராஜா, மைத்ரேயன் ஆகியோரை தொடர்ந்து அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியனும் சமீபத்தில் திமுகவில் இணைந்தார்.. அதே போல் ஜெயலலிதா இருந்த போது, அவருக்கு உரைகளை எழுதிக் கொடுத்தவ்ரும் நமது எம்.ஜி.ஆர் ஆசிரியராகவும் இருந்த மருது அழகுராஜ் சமீபத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார்.. மேலும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சிலர் திமுகவில் இணைய உள்ளதாக தொடர்ந்து தகவல் வெளியான வண்ணம் உள்ளது..
குறிப்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி திமுகவில் இணைய உள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகின.. இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள கொங்கு திருப்பதி கோயிலில் தமிழ்நாடு வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணியும் ஒன்றாக சாமி தரிசனம் செய்தனர்.. இன்று காலை முதலில் கோயிலுக்கு வந்த தங்கமணி 15 நிமிடங்கள் காத்திருந்த நிலையில், அமைச்சர் முத்துசாமி கோயிலுக்கு வந்தார். அப்போது முத்துச்சாமியைவரவேற்று தங்கமணி அவரை கோயிலுக்குள் அழைத்து சென்றார்.. இருவரும் சேர்ந்து கோயிலில் தரிசனம் செய்தனர்..
இதையடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி திமுகவில் இணைய உள்ளதாக தகவல் மீண்டும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.. இந்த நிலையில் சாகும் வரை அதிமுகவில் தான் இருப்பேன் என்று தங்கமணி விளக்கம் அளித்துள்ளார்.. எடப்பாடி பழனிசாமி மீது அதிக நம்பிக்கைக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்..
அதே போல் தங்கமணியுடன் அரசியல் பேசவில்லை என்றும், கோயில் சீரமைப்பு பணிகள் தொடர்பாக தான் தங்கமணியுடன் பேசினேன் என்று அமைச்சர் முத்துசாமியும் விளக்கம் அளித்துள்ளார்..



