கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் (101), மாரடைப்பால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே பக்கவாதம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவருக்கு, நேற்றிரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் இதய நோய் நிபுணர்கள் தலைமையிலான குழு, அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் எம்.வி. கோவிந்தன், நேரில் சென்று அச்சுதானந்தனை சந்தித்து, மருத்துவர்களிடமிருந்து உடல் நிலை குறித்த விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் பேசிய அவர், “இப்போதைக்கு அவரின் உடல்நிலை சீராக உள்ளது” என்றும், மருத்துவர்கள் தொடர்ந்து கவனித்து வருகிறார்கள் என்றும் தெரிவித்தார்.
யார் இந்த வி.எஸ். அச்சுதானந்தன்? ஒரு மூத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் மற்றும் கேரளாவின் முன்னாள் முதல்வர். 1923-ல் ஆலப்புழா மாவட்டத்தில் பிறந்த இவர், வறுமையில் இருந்து எழுந்து, தொழிலாளர் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்காக போராடியவர். புன்னப்புரா-வயலார் போர் உள்ளிட்ட பல எதிர்ப்புப்போராட்டங்களில் பங்கேற்று, பலமுறை சிறைவாசம் அனுபவித்துள்ளார். 2006-ல் முதல்வராக பதவியேற்றார். 80 ஆண்டுகளுக்கும் மேலான தனது அரசியல் வாழ்நாளில் ஊழல் எதிர்ப்பு, சமூகநீதி என பன்முக சேவைகளை ஆற்றியவர். வயது மூப்பு காரணமாக, வி.எஸ்.அச்சுதானந்தன் கடந்த சில ஆண்டுகளாக பொது வாழ்க்கையில் இருந்து விலகி ஓய்வில் இருந்து வருகிறார்.
Read more: அதிர்ச்சி..! இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 145 பெண்கள் மீது போதை ஊசி தாக்குதல்..!!