மேற்கு வங்காளத்தின் ஆளும் திரிணாமுல் காங்கிரஸின் (TMC) நிறுவன உறுப்பினரும், முன்னாள் ரயில்வே அமைச்சருமான முகுல் ராய், திங்கட்கிழமை அதிகாலை கொல்கத்தா மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 71. பார்கின்சன் நோய் உட்பட பல நோய்களால் அவதிப்பட்டு வந்த அவருக்கு, 3 அறுவை சிகிச்சைகள் நடந்ததாக அவரது மகன் சுப்ரான்ஷு ராய் தெரிவித்தார். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கோமா நிலையில் இருந்ததாக சுப்ரான்ஷு கூறினார்.
முகுல் ராயின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.. பாரதிய ஜனதா கட்சி (BJP) தலைவர் திலீப் கோஷ், அவரை ஒரு அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி என்று வர்ணித்தார், அவர் கடந்த இரண்டு-மூன்று ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், அரசியலில் தீவிரமாக பங்கேற்க முடியவில்லை என்றும் கூறினார்.
“அவர் ஒரு அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி. மத்திய அமைச்சராகவும் ஆனார். பாஜகவுக்கு வந்தபோது, அவருக்கு மிகுந்த மரியாதை அளிக்கப்பட்டது. 2019-2021 வரை, அவர் எங்களுடன் இருந்தார். பின்னர், பாஜகவை விட்டு வெளியேறி டிஎம்சிக்குச் சென்றார். கடந்த 2-3 ஆண்டுகளாக, அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் அரசியலில் தீவிரமாக பங்கேற்க முடியவில்லை. அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்…” என்று கூறினார்.
மேற்கு வங்க சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரியும் முகுல் ராயின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.. அவரின் எக்ஸ் பக்க பதிவில் “மூத்த அரசியல்வாதி ஸ்ரீ முகுல் ராயின் மறைவு குறித்து அறிந்து மிகவும் மனமுடைந்து போனேன். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆன்மா நித்திய சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.
மே 2021 இல் பாஜக எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட முகுல் ராய், சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஆகஸ்ட் 2021 இல் முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் டிஎம்சி தேசிய பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸில் (டிஎம்சி) இணைந்ததாகக் கூறப்படுகிறது. டி.எம்.சி உருவாக்கப்படுவதற்கு முன்பு, அவர் காங்கிரசில் உறுப்பினராக இருந்தார்.
டி.எம்.சி.க்கு தாவியதைத் தொடர்ந்து மாநில சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்காக ராய் சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
ஜனவரி மாதம் கொல்கத்தா உயர் நீதிமன்றம் ராயை மாநில சட்டமன்றத்திலிருந்து தகுதி நீக்கம் செய்த உத்தரவை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது..
மன்மோகன் சிங் தலைமையிலான இரண்டாவது UPA அரசாங்கத்தின் போது முகுல் ராய் கப்பல் போக்குவரத்து அமைச்சகத்திலும் பின்னர் ரயில்வே அமைச்சகத்திலும் இணை அமைச்சராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.



