மத்தியப் பிரதேச மாநிலம் சட்னாவில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் அரசு மருத்துவமனையில், தலாசீமியா (Thalassaemia) நோய்க்காக சிகிச்சை பெற்று வந்த 4 குழந்தைகளுக்கு ரத்தமாற்றம் மூலம் HIV தொற்று ஏற்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. மேலும் சுகாதார விசாரணைக்கும் நிர்வாக நடவடிக்கைக்கும் வழிவகுத்துள்ளது.
டிசம்பர் 16ஆம் தேதி, மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், மரபணு ரத்த நோயான தலாசீமியாவால் பாதிக்கப்பட்ட இந்த குழந்தைகள் HIV தொற்றுடன் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதிகாரிகள் இந்த ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரை மருத்துவமனையில் செய்யப்பட்ட மாசடைந்த ரத்தமாற்றமே தொற்றுக்குக் காரணமாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொற்றின் துல்லியமான மூல காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. தற்போது விசாரணை, மருத்துவமனையின் செயல்பாடுகள் மற்றும் குறிப்பாக ரத்த வங்கி நடைமுறைகள் மீது கவனம் செலுத்துகிறது.
சட்னா மாவட்டத்தின் முதன்மை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி (CMHO) டாக்டர் மனோஜ் ஷுக்லா, தலாசீமியா நோயாளிகளுக்கு மீண்டும் மீண்டும் ரத்தமாற்றம் தேவைப்படுவதால் அவர்கள் அதிக ஆபத்து குழுவில் உள்ளனர் என்று தெரிவித்தார். HIV தொற்று உறுதியான உடனே, எதிர் வைரஸ் சிகிச்சை (ART) குழந்தைகளுக்கு உடனடியாக தொடங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
மேலும், தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு (NACO) விதிமுறைகளின்படி ரத்தம் முழுமையாக பரிசோதிக்கப்பட்ட பிறகே வழங்கப்பட வேண்டும் என்றும், HIV போன்ற தொற்று கண்டறியப்பட்ட ரத்த மாதிரிகள் அழிக்கப்பட வேண்டும் என்பதே நடைமுறை என்றும் அவர் விளக்கினார்.
இந்த சம்பவத்தின் அதீத நுணுக்கத்தையும் தீவிரத்தையும் கருத்தில் கொண்டு, மத்திய மற்றும் மாநில சுகாதாரத் துறைகளின் கூட்டு விசாரணைக் குழு மருத்துவமனைக்கு வந்து, HIV பாதிக்கப்பட்ட ரத்தம் எவ்வாறு குழந்தைகளுக்கு செலுத்தப்பட்டது என்பதைக் குறித்து விரிவான விசாரணை மேற்கொண்டு வருகிறது.
டிசம்பர் 16ஆம் தேதி மத்தியப் பிரதேச பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைத்த 6 பேர் கொண்ட விசாரணைக் குழு இந்த விவகாரத்தை ஆராய்ந்து வருகிறது. மேலும் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) குழுவும், மாநில அளவிலான குழுக்களும் இணைந்து, ரத்த வங்கிகளின் உரிமம், கண்காணிப்பு முறைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்து வருகின்றன.
மாநில மருத்துவக் குழுத் தலைவர் டாக்டர் யோகேஷ், உண்மை நிலையை கண்டறிய நிகழ்வுகளின் தொடர் வரிசையை நிரூபிக்கும் விசாரணை நடந்து வருவதாக தெரிவித்தார். இந்த விசாரணை மிகுந்த ரகசியத்துடன் மேற்கொள்ளப்படுவதாகவும், ஆய்வு முழுமையடைந்த பிறகே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்த சம்பவம் குறித்து வெளியான விசாரணைக் குழுவின் முதற்கட்ட கண்டறிதல்களின் அடிப்படையில், ரத்த வங்கி பொறுப்பாளர் டாக்டர் தேவேந்திர பட்டேல் மற்றும் இரண்டு ஆய்வக தொழில்நுட்ப நிபுணர்கள் வியாழக்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
மேலும், மாவட்ட மருத்துவமனையின் முன்னாள் சிவில் சர்ஜன் டாக்டர் மனோஜ் ஷுக்லாவுக்கு காரணம் காண்க (Show Cause) நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அவர் எழுத்து மூலம் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், அந்த விளக்கம் திருப்திகரமாக இல்லாவிட்டால் கடுமையான துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இந்த சம்பவம் அரசியல் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சி, அதிகாரிகளின் கடுமையான அலட்சியத்தை குற்றம்சாட்டி, சட்னா மாவட்ட மருத்துவமனை முன்பு தர்ணா போராட்டம் நடத்தி, பொறுப்பாளர்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தது.
இதனிடையே, அரசு மருத்துவமனை அருகே சட்டவிரோதமாக ரத்தம் விற்பனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து வந்த புகார்களின் அடிப்படையில், போலி வாடிக்கையாளர் (decoy customer) மூலம் இந்த ராக்கெட் முறியடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
துணை மாவட்ட ஆட்சியர் ராகுல் சிலாடியா, ஒருவர் ஒரு யூனிட் ரத்தத்தை ரூ.4,500க்கு விற்க முன்வந்தபோது பிடிபட்டதாகவும், அதன் பின்னர் மேலும் இருவர் கைது செய்யப்பட்டதாகவும் கூறினார். கைது செய்யப்பட்டவர்கள் ரஞ்சித் சாஹு, முகமது கைஃப் மற்றும் அனில் குப்தா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த ரத்த விற்பனை சம்பவம் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸ் தெரிவித்தது.
அரசு மருத்துவமனையின் ரத்த வங்கி ஊழியர்கள் இதில் தொடர்புடையவர்களா என்பதையும் விசாரணை செய்து வருவதாக அதிகாரிகள் கூறினர். மாசடைந்த ரத்தமாற்றம் மற்றும் சட்டவிரோத ரத்த விற்பனை ஆகிய இரு விஷயங்களிலும் விசாரணை தொடரும் நிலையில், பொது சுகாதார கண்காணிப்பில் ஏற்பட்டுள்ள இந்த கடுமையான தவறுக்கு யார் பொறுப்பு என்பதைக் கண்டறிய அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.



