பொங்கல் திருநாளை ஒட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு நவம்பர் 15 முதல் இலவச வேட்டி, சேலை வழங்கப்படும் என அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு கைத்தறி நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் தொடர்ந்து வேலைவாய்ப்பு வழங்குவதற்காக கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு பொங்கல் பண்டிகைக்காக விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தினை 1983ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் எம்ஜிஆரால் தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வரும் 2026ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு 1,44,10,000 வேட்டி மற்றும் 1,46,10,000 சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு தயாராக உள்ளது. கைத்தறி மற்றும் துணிநூல் துறை பொங்கல் வேட்டி, சேலை திட்டத்திற்கு சுமார் 4600 மெட்ரிக் டன் நூல் கொள்முதல் செய்ய அரசு டெண்டர் கொடுத்தது. இந்த நிலையில் பொங்கல் திருநாளை ஒட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு நவம்பர் 15 முதல் இலவச வேட்டி, சேலை வழங்கப்படும் என அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்; தி.மு.க. ஆட்சியில் கைத்தறி நெசவாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாகவும், பொங்கலுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி சேலைகள் மிகவும் தரமாக இருப்பதால் அனைவரும் கட்டி மகிழ்வதாகவும் குறிப்பிட்டார். மேலும், இந்த ஆண்டுக்கான பொங்கல் வேட்டி சேலைகள் நவம்பர் 15-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், கூட்டுறவு சங்கங்களில் விற்பனை செய்யப்படும் பட்டுகள்தான் உண்மையான பட்டு என்றும், தாங்கள் உத்திரவாதத்துடன் (கேரண்டி) விற்பனை செய்வதாகவும் கூறினார். தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வதால், பட்டுச் சேலைகளின் விலையும் உயர்ந்துள்ளது. எனவே, புடவைகளில் சேர்க்கப்படும் ஜரிகையில் தங்கம் மற்றும் வெள்ளியைக் குறைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.



