பெங்களூருவின் கோவிந்தாபுரா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், பீகாரைச் சேர்ந்த தையல் கலைஞர் ஒருவர் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவருக்கு தொழில் ரீதியாக உதவி செய்து வந்த ஜஹாங்கீர் என்பவருடன் ஏற்பட்ட நட்பு, காலப்போக்கில் நெருக்கமான குடும்ப நட்பாக மாறியுள்ளது. ஆனால், அந்த நன்மதிப்பை துஷ்பிரயோகம் செய்த ஜஹாங்கீர், கடந்த 2023-ம் ஆண்டு தையல்காரர் வீட்டில் இல்லாத சமயம் பார்த்து, அவரது மனைவியை கட்டாயப்படுத்திப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்த கொடூரத்தை அத்துடன் நிறுத்தாமல், வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார் ஜஹாங்கீர். “இந்த விஷயத்தை வெளியே சொன்னால் வீடியோவை இணையத்தில் வெளியிட்டு விடுவேன்” என்றும், “உன்னை கொலை செய்துவிடுவேன்” என்றும் மிரட்டியுள்ளார். இந்த மிரட்டலுக்குப் பயந்து அந்தப் பெண் அமைதியாக இருந்ததை சாதகமாக்கிக் கொண்ட ஜஹாங்கீர், தொடர்ந்து அந்தப் பெண்ணுக்குப் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார். இடையில், தனது மகனின் மருத்துவச் சிகிச்சைக்காக அந்தப் பெண் சொந்த ஊரான பீகாருக்கு சென்றுவிட்டு, கடந்த 10-ம் தேதி மீண்டும் பெங்களூரு திரும்பியுள்ளார்.
அந்தப் பெண் திரும்பியதை அறிந்த ஜஹாங்கீர், மீண்டும் தனது இச்சைக்கு இணங்குமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால், அந்தப் பெண் அதற்கு மறுப்பு தெரிவிக்கவே, ஜஹாங்கீர் தனது அடுத்தகட்ட மிரட்டலை தொடங்கியுள்ளார். “உல்லாசத்திற்கு வரவில்லை என்றால் ரூ. 5 லட்சம் பணம் தர வேண்டும், இல்லையெனில் அந்த ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் பகிருவேன்” என மிரட்டியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்தப் பெண், கோவிந்தாபுரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் அடிப்படையில், ஜஹாங்கீர் மீது பாலியல் வன்கொடுமை, மிரட்டிப் பணம் பறித்தல், ஆபாச வீடியோ எடுத்துத் துஷ்பிரயோகம் செய்தல் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போது தலைமறைவாக இருக்கும் ஜஹாங்கீரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
Read More : காலையிலேயே அதிர்ச்சி..!! அதிமுகவுடன் கூட்டணி இல்லை..!! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட டிடிவி தினகரன்..!!



