அரசு மருத்துவமனைகளில் கட்டண பிரிவு தொடங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்திருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “அனைத்து மக்களுக்கும் மருத்துவ சேவைகள் கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். மருந்துகள், சிகிச்சைகள் என அனைத்தும் அனைவருக்கும் ஒன்றாகவே இருக்கும். ஆனால், தனிமையான முறையில் அறையில் சிகிச்சை பெற விரும்புவோருக்கு அரசு மருத்துவமனைகளில் கட்டணம் வசூலிக்கப்படும். இது பொதுவார்டுகளைத் தவிர தனிப்பட்ட வசதிகளை விரும்புவோருக்கான ஏற்பாடாகும்” என்று தெரிவித்துள்ளார்.
அரசு மருத்துவமனைகள் என்றாலே காலம் காலமாக இலவசமாக சிகிச்சை முறைகள் தான் இருந்து வருகிறது. ஆனால், தற்போது அரசு மருத்துவமனையிலும் கட்டண பிரிவு தொடங்கப்படும் என அமைச்சர் கூறியிருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கட்டண பிரிவில் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும் என்பது குறித்து தகவல் இன்னும் வெளியாகவில்லை.
தொடர்ந்து பேசிய அவர், “இந்திய அளவிலும், தமிழ்நாடு அளவிலும் கொரோனா வைரஸால், தற்பொழுது எந்த உயிரிழப்பும் இல்லை. அதே நேரத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், இணை நோய் பாதிப்பு இருப்பவர்கள், கர்ப்பிணிகள், வயதானோர் பொதுஇடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் அணிந்து கொள்வது நல்லது.
தமிழ்நாட்டை விட கேரளாவில் தான் நாள் ஒன்றுக்கு பத்து மடங்கு அதிகமாக கொரோனா பரவி வருகிறது. ஆனால், அங்கும் கொரோனா உயிரிழப்புகள் பதிவாகவில்லை. ஏற்கனவே ஏற்பட்ட உயிரிழப்புகளுமே கூட இணை நோய்கள் இருந்தது தான் காரணம். அவர்கள் உயிரிழப்பதை கொரோனா உயிரிழப்பாக கருத முடியாது” என்று தெரிவித்தார்.