மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுடன் பயணிப்பவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படும் என்ற புதிய போக்குவரத்து விதி நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான சாலை விபத்து மரணங்கள் தமிழகத்தில் தான் நடப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது. குறிப்பாக, கடந்தாண்டு மட்டும் தமிழகத்தில் 11,419 இறப்புகள் நிகழ்ந்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. சென்னையில் மட்டும் 1,026 பேர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். சாலை விபத்துகளை குறைக்க போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளிலும், புது திட்டத்தையும் அமல்படுத்தி வருகின்றனர். கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த புதிய மோட்டார் வாகன திருத்த சட்டத்தில், தமிழகத்தில் குடிபோதையில் வாகனத்தை இயக்கும் வாகன ஓட்டிகளுக்கு மட்டும் புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி 10,000 அபராதம் விதிக்கப்பட்டு அவை நீதிமன்றம் மூலமாக பெறப்பட்டு வருகின்றன. கடந்தாண்டு மட்டும் சென்னையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 1,178 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

அந்த வகையில், இன்று முதல் சென்னையில் புதிய போக்குவரத்து விதி அமலுக்கு வந்துள்ளது. மதுபோதையில் வாகனம் ஓட்டும் நபரிடம் மட்டுமே அபராதத் தொகை வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது வாகன ஓட்டுனர் குடிபோதையில் இருந்து, பின்னால் அமர்ந்து செல்வோர் குடிபோதையில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆட்டோ, கார் போன்ற வாகனங்களில் ஓட்டுநர் குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால், அவருடன் பயணிக்கும் நபர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

அதேநேரத்தில், சவாரி செல்லும் போது இந்த விதிமுறை பின்பற்றப்படாது என போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த நடைமுறைகள் நேற்று நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்படுவதாகவும் அபராதம் விதிக்கப்படுவதாகவும் சென்னை போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். மோட்டார் வாகன சட்டம் பிரிவு 185- போதையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் 188- குற்றத்திற்கு துணை போகுதல் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்து அபராதம் வசூலிக்கப்படும் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை விளக்கமளித்துள்ளது.