புதுச்சேரி அருகே தமிழகத்தின் பட்டானூரிலுள்ள சங்கமித்ரா திருமண மண்டபத்தில், பாமக (பட்டாளி மக்கள் கட்சி) சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று (17.08.2025) காலை 11 மணிக்கு துவங்கியது. இந்த கூட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், 200-க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், தலைவர்கள் உள்ளிட்ட சுமார் 4,000 பேர் பங்கேற்றனர்.
இந்த சிறப்பு பொதுக்குழுவில் மொத்தம் 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கியமானவை: சட்டமன்ற, நாடாளுமன்ற மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் தனியாகவோ, கூட்டணி அமைத்தோ போட்டியிடுவது குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் டாக்டர் ராமதாஸ் ஒருவருக்கே வழங்கப்பட்டது.
தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்படும் படிவங்களில் கையெழுத்திடும் அதிகாரமும் ராமதாஸுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. இந்த தீர்மானங்கள், பாமக உள்ளக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. இந்தப் பொதுக்குழுவில் அன்புமணி மீது சில குற்றச்சாட்டுகளையும் கட்சி நிர்வாகிகள் முன்வைத்துப் பேசினர்.
அன்புமணி மீதான 16 குற்றச்சாட்டுகள் என்னென்ன? என்பது குறித்து பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் ஜி.கே.மணி பட்டியலிட்டார்.
- மைக்கை தூக்கிப் போட்டதுடன், பனையூர் அலுவலகத்துக்கு வரச்சொல்லி தொண்டர்களுக்கு கைப்பேசி எண் கொடுத்தது.
- தைலாபுரத்தில் நடந்த மா.செ.கூட்டத்திற்கு, 100 மா.செ.க்களை வராமல் தடுத்தது
- சமூக ஊடகங்களில் ராமதாஸ் பற்றி அவதூறான, அருவருக்கத்தக்க, இழிவுபடுத்தும் செய்திகளை வெளியிட்டது.
- சமரச பேச்சுவார்த்தையை ஏற்றுக்கொள்ளாமல் உதாசீனப்படுத்தியது
- ராமதாஸ் இருக்கைக்கு கீழ் ஒட்டுக்கேட்பு கருவி வைத்தது.
- அனுமதி பெறாமல் பொதுக்குழுவில், தனி இருக்கை, துண்டு வைத்து, ‘ராமதாஸுக்கு நல்ல புத்தி கிடைக்க’ வேண்டியது.
- அனுமதியை மீறி ‘உரிமை மீட்க தலைமுறை காக்க’ என்ற நடைபயணம் கபட நாடகம்
- ராமதாஸை சந்திக்க வருவோரிடம், பணமும் பதவியும் தருவதாக ஆசை வார்த்தை கூறி பனையூருக்கு கடத்திச் செல்வது
- புகைப்படம், பெயர் விவகாரத்தில் ராமதாஸ் வலியுறுத்திய பின்னரும், கூட்டங்களில் தொடர்ந்து கொச்சைப்படுத்தி பேசிவருவது.
- பசுமைத்தாயகம் அமைப்பை திட்டமிட்டு கைப்பற்றிக் கொண்டது.
- ராமதாஸ் அனுமதி பெறாமல் பொதுக்குழு கூட்டி, அவருக்கே தனி இருக்கை வைத்து துண்டு அணிவித்தது.
- பாமக தலைமை அலுவலகத்தை, ராமதாஸுக்கு தெரியாமலேயே மாற்றியது.
- ராமதாஸிடம் எதுவுமே பேசாமல், 40 முறை பேசியதாக பொதுவெளியில் சொன்னது.
- ஜி.கே.மணி, அருள் ஆகியோர் மருத்துவமனையில் இருந்தபோது, கூட்டுப் பிரார்த்தனை செய்வதாக கேலி கிண்டல் செய்தது.
- ராமதாஸ் நீக்கியவர்களை மீண்டும் கட்சியில் சேர்த்தது செல்லாது
- மக்கள் தொலைக்காட்சியை அபகரித்தது.
16 குற்றச்சாட்டுகளை முன்வைத்து அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க, பாமக நிறுவனர் ராமதாஸ்-க்கு, 8 பேர் கொண்ட ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரை செய்ததாக ஜி.கே.மணி தெரிவித்தார்.
Read more: 10 வது தேர்ச்சி போதும்.. கடலோர காவல் படையில் சேர அருமையான வாய்ப்பு..!! எப்படி விண்ணப்பிப்பது..?