ரயில் பயணிகளின் வசதிக்காக நீண்ட காலமாக பயன்பாட்டில் இருந்து வந்த UTS செயலிக்கு விடை கொடுத்து விட்டு, அனைத்து வசதிகளையும் ஒரே இடத்தில் வழங்கும் புதிய தொழில்நுட்பத்திற்கு இந்திய ரயில்வே மாறுகிறது. அதன்படி, வரும் மார்ச் 1-ஆம் தேதி முதல் UTS செயலியின் சேவை முழுமையாக நிறுத்தப்படும் என ரயில்வே அமைச்சகம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த 2014-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட UTS செயலி, முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகள், சீசன் டிக்கெட்டுகள் மற்றும் பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகளை காகிதம் இல்லாமல் பெற பயணிகளுக்கு பெரும் உதவியாக இருந்தது. சுமார் பத்து ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த இந்த செயலிக்கு பதிலாக, தற்போது நவீன வசதிகளுடன் கூடிய புதிய செயலி பயன்பாட்டிற்கு வந்துள்ளதால் இந்த மாற்றம் செய்யப்படுகிறது.
புதிய ‘RailOne’ செயலி :
ரயில்வேயின் பல்வேறு சேவைகளை ஒருங்கிணைத்து கடந்த ஆண்டு ‘RailOne’ என்ற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செயலியின் பயன்பாட்டை மக்களிடையே அதிகரிக்கச் செய்யும் வகையில், கடந்த ஜனவரி மாதம் முதல் இந்த செயலி மூலம் முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை எடுக்கும் பயணிகளுக்கு 3 சதவீத தள்ளுபடி வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இது பயணிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ஒரே செயலியில் அனைத்து வசதிகள் :
முன்பு டிக்கெட் எடுக்க ஒரு செயலி, ரயிலின் நேரத்தை அறிய மற்றொரு செயலி என தனித்தனியாக இருந்த நிலையை RailOne மாற்றியுள்ளது. இந்த புதிய செயலியில் IRCTC Rail Connect, Rail Madad, Food on Track போன்ற பல சேவைகள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வது முதல் ரயில்களின் ஓடும் நிலை, உணவுகளை ஆர்டர் செய்வது மற்றும் புகார்களை பதிவு செய்வது என அனைத்து தேவைகளையும் பயணிகள் ஒரே இடத்தில் பூர்த்தி செய்து கொள்ள முடியும். எனவே, வரும் மார்ச் முதல் பயணிகள் தங்களது ரயில் பயண தேவைகளுக்கு RailOne செயலியை பயன்படுத்துமாறு ரயில்வே அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
Read More : ஆண்களே..!! தாம்பத்திய உறவில் ‘கிங்’காக இருக்கணுமா..? ஆண்மையை அதிகரிக்கும் இயற்கை மருந்துகள்..!!



