கர்நாடக மாநிலம் சாமராஜ நகர் மாவட்டம் கொல்லேகலில் அமைந்துள்ள ஒரு தனியார் பேச்சு மற்றும் செவிப்புலன் பள்ளியில் அரங்கேறிய கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அங்கு ஆசிரியராக பணியாற்றி வந்த ஒருவர், கடந்த 13 வருடங்களுக்கும் மேலாகப் பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடு உள்ள மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பாதிக்கப்பட்ட குழந்தைகளால் தங்களது நிலையை வெளியில் யாரிடமும் எடுத்துச் சொல்லவோ, பேசவோ முடியாத காரணத்தை பயன்படுத்தி, அந்த ஆசிரியர் தனது கொடூரச் செயலைத் தொடர்ந்து செய்து வந்துள்ளார். இந்த நீண்ட கால அட்டூழியம் குறித்து பாதிக்கப்பட்ட ஒரு பெண் அளித்த புகாரின் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
13 ஆண்டுகளாகப் பேச்சுத் திறன் அற்ற குழந்தைகளுக்கு ஒரு பள்ளியின் வளாகத்திலேயே இத்தகைய கொடூரச் சம்பவம் நடந்தது, பெற்றோர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்த விசாரணையை காவல்துறை முடுக்கி விட்டுள்ளது.



