இந்திய ரயில்வே தனது டிஜிட்டல் சேவைகளை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் விதமாக, ரெயில் ஒன் (Rail One) எனும் ஒருங்கிணைந்த புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. முன்பதிவு செய்த டிக்கெட்கள் முதல் முன்பதிவில்லாத டிக்கெட்கள், பிளாட்பார்ம் டிக்கெட்கள், பிஎன்ஆர் நிலவரம் மற்றும் ரயில்களின் தற்போதைய இருப்பிடம் என அனைத்துத் தகவல்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வருவதே இச்செயலியின் சிறப்பம்சமாகும்.
இதுவரை ஐஆர்சிடிசி (IRCTC) மற்றும் யுடிஎஸ் (UTS) என தனித்தனி செயலிகளைப் பயன்படுத்தி வந்த பயணிகளுக்கு, இந்த ஒரே செயலி வசதி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தச் செயலியைப் பயணிகளிடையே பிரபலப்படுத்தவும், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கவும் ரயில்வே நிர்வாகம் இன்று (ஜனவரி 14, 2026) முதல் ஒரு அதிரடிச் சலுகையை அமலுக்குக் கொண்டு வந்துள்ளது.
அதன்படி, ‘ரெயில் ஒன்’ செயலி வாயிலாக முன்பதிவில்லாத சாதாரண மற்றும் புறநகர் ரயில் டிக்கெட்டுகளை எடுக்கும் பயணிகளுக்கு, மொத்த கட்டணத்தில் 3 சதவீத தள்ளுபடி வழங்கப்படும். முன்பு ‘ஆர்-வாலட்’ (R-Wallet) மூலம் பணம் செலுத்தினால் மட்டுமே வழங்கப்பட்டு வந்த இந்தச் சலுகை, தற்போது யுபிஐ (UPI), கிரெடிட்/டெபிட் கார்டு என எந்தவொரு டிஜிட்டல் முறை மூலம் பணம் செலுத்தினாலும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று முதல் வரும் ஜூலை 14, 2026 வரை 6 மாத காலத்திற்கு நடைமுறையில் இருக்கும் இந்தத் திட்டம், ரயில் நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் சிரமத்தைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 89 சதவீத பயணிகள் ஏற்கனவே ஆன்லைன் முன்பதிவிற்கு மாறிவிட்ட நிலையில், மீதமுள்ள பயணிகளையும் டிஜிட்டல் முறைக்கு ஈர்க்க இந்த 3 சதவீத தள்ளுபடி ஒரு முக்கியத் தூண்டுகோலாக இருக்கும். இந்தச் சலுகை ‘ரெயில் ஒன்’ செயலியைத் தவிர மற்ற இணையதளங்களுக்கோ அல்லது முன்பதிவு மையங்களுக்கோ பொருந்தாது என ரயில்வே நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.



