உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.
கிட்டத்தட்ட 15 நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.. அதன்படி கடந்த சனிக்கிழமை வரலாறு காணாத புதிய உச்சமாக தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.10,000-ஐ கடந்து, சவரனுக்கு ரூ.81,000ஐ தாண்டியது. இதனால் நகைப்பிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ. 10 குறைந்து ரூ. 10,210-க்கும் சவரனுக்கு ரூ. 80 குறைந்து ரூ. 81,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் கிராம் ரூ.143-க்கும், ஒரு கிலோ ரூ.1.43 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்..



