சர்வதேச சந்தையில் நிலவிவரும் கச்சா எண்ணையின் விலை நிலவரம் மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட அவற்றின் அடிப்படையில் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன. மாதம் தோறும் வணிக சிலிண்டரின் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், தொடர்ந்து 3வது மாதமாக வணிக சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
அதாவது மே மாத தொடக்கத்தில் கூட, நிறுவனங்கள் சிலிண்டருக்கு ரூ.14.50 விலையைக் குறைத்திருந்தன. ஜூன் மாதத்திலும் ரூ. 25 குறைக்கப்பட்டது. இதையடுத்து, ரூ.1,881க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில், எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் (ஓஎம்சி) ஜூலை 1, 2025 முதல் 19 கிலோ வணிக எல்பிஜி சிலிண்டரின் விலையை ரூ.57.50 குறைத்துள்ளன. அதன்படி, சென்னையில் இன்றுமுதல் வணிக எல்பிஜி சிலிண்டர் ரூ.1,823.50க்கு விற்பனை செய்யப்படும். இதன் மூலம் நாட்டின் சிறிய மற்றும் பெரிய உணவகங்கள், தாபாக்கள் மற்றும் ஹோட்டல்களுக்கு சிறிது நிவாரணம் கிடைத்துள்ளது.
இந்தியாவில் சமையல் எரிவாயு (எல்பிஜி) விலைகள் நேர்மாறாக மாறிக்கொண்டே இருக்கின்றன. இது பொதுமக்கள் மற்றும் வணிகங்களின் செலவுகளுக்கு நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, உணவகங்கள், ஹோட்டல்கள், சிறு அளவிலான உணவு தயாரிப்பு நிறுவனங்கள் போன்றவை அதிகளவில் எல்பிஜியை நம்பியிருப்பதால், விலைகளில் ஏற்படும் எந்த மாற்றமும் அவர்களின் செலவுகளை மாற்றிவிடுகிறது.