சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று தக்காளி விலை ரூ.20 வரை குறைந்துள்ளது. இது மகிழ்ச்சியை கொடுத்தாலும் சின்ன வெங்காயம், பீன்ஸ், பூண்டு, இஞ்சி உள்ளிட்ட பொருட்களின் விலை உச்சத்தில் உள்ளன.
நாட்டின் பல்வேறு இடங்களில் தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.200 வரை கூட விற்பனையானது. அதேபோல் இஞ்சி, சின்ன வெங்காயத்தின் விலைகளும் எகிறின. இதனால் அனைத்து தரப்பு மக்களும் சிரமத்திற்கு ஆளாகினர். மத்திய அரசும், ஒவ்வொரு மாநில அரசும் விலையேற்றத்தை தடுக்கும் வகையில் சிறப்பு நடவடிக்கையை எடுத்துள்ளன. தமிழ்நாட்டில் அரசு சார்பில் ரேஷன் கடைகளில் தக்காளி குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும், தோட்டக்கலைத்துறை சார்பில் நேரடியாகவும், வாகனங்களிலும் சில இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் தான் கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை ஓரளவு குறைந்து வருகிறது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்றைய தினத்தை ஒப்பிடும்போது இன்று தக்காளியின் விலை குறைந்துள்ளது. அதாவது நேற்று சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.130க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், இன்று ரூ.20 குறைந்து கிலோ ரூ.110-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.130-க்கு விற்பனையாகிறது.
தக்காளி விலை குறைந்தாலும் பீன்ஸ், சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு உள்ளிட்டற்றவற்றின் விலை உச்சத்தில் தான் உள்ளன. கோயம்பேடு சந்தையில் பீன்ஸ் விலை இன்று கிலோவுக்கு ரூ.30 அதிகரித்து ரூ.110க்கு விற்பனையாகிறது. அதேபோல் சின்ன வெங்காயம், பூண்டு உள்ளிட்டவை கிலோ ரூ.200க்கும், இஞ்சி கிலோ ரூ.220க்கும் விற்பனையாகிறது. இருப்பினும் பெரிய வெங்காயம் விலை குறைந்து காணப்படுகிறது. ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.20 முதல் ரூ.25க்கும் விற்பனையாகிறது. மேலும் வெண்டைக்காய் கிலோ ரூ.45 முதல் ரூ.55க்கும், முள்ளங்கி ரூ.35 முதல் ரூ.40க்கும், கத்தரிக்காய் ரூ.45 முதல் ரூ.55க்கும், காலி பிளவர் ரூ.30 முதல் ரூ.40க்கும், முட்டைகோஸ் கிலோ ரூ.15க்கும் விற்பனையாகிறது.