பயணிகளுக்கு ஒரு பெரும் நிவாரணமாக, மத்திய அரசு விமானங்களில் இருக்கைத் தேர்வு கட்டணங்களுக்கு உச்சவரம்பு நிர்ணயித்துள்ளது.. மேலும் , ஒவ்வொரு விமானத்திலும் குறைந்தது 60% இருக்கைகள் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த மத்திய அரசின் நடவடிக்கையால், இந்தியாவில் விமான பயணிகள் தங்களின் இருக்கைகளை தேர்வு செய்யும் போது விதிக்கப்படும் கூடுதல் கட்டணங்கள் குறைய வாய்ப்பு உள்ளது.
இது தொடர்பாக, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் (Civil Aviation Ministry), ஒவ்வொரு விமானத்திலும் குறைந்தது 60% இருக்கைகள் இலவசமாக ஒதுக்கப்பட வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம், இருக்கை தேர்வுக்காக பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை கட்டுப்படுத்தப்படுகிறது.
சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) வெளியிட்டுள்ள இந்த உத்தரவு, பயணிகளின் வசதியை மேம்படுத்துவதோடு, விமான முன்பதிவு நடைமுறைகளில் அதிக நேர்மையையும் வெளிப்படைத்தன்மையையும் கொண்டுவரும்.
உலகளவில் 3-வது பெரிய உள்நாட்டு விமானப் போக்குவரத்து சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ள நிலையில் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும், ‘உடான்’ (UDAN) திட்டத்தின் கீழ் விமானப் பயணம் பெருகிய முறையில் எளிதில் அணுகக்கூடியதாகவும் அனைவரையும் உள்ளடக்கியதாகவும் மாறிவருகிறது. இந்தியாவில் உள்ள விமான நிலையங்கள் தினமும் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான பயணிகளைக் கையாளுகின்றன, இது இத்துறையின் விரைவான வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது.
பயணிகளுக்கான புதிய வழிகாட்டுதல்கள் என்னென்ன?
பயணிகளின் வசதி, வெளிப்படைத்தன்மை மற்றும் விமான நிறுவனங்கள் முழுவதும் நடைமுறைகளில் சீரான தன்மையை மேலும் வலுப்படுத்த, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) மூலம் அமைச்சகம் பின்வரும் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது:
நியாயமான அணுகலை உறுதி செய்வதற்காக, எந்தவொரு விமானத்திலும் குறைந்தபட்சம் 60% இருக்கைகள் இலவசமாக ஒதுக்கப்பட வேண்டும்.
ஒரே PNR-இல் பயணிக்கும் பயணிகள் ஒன்றாக, முன்னுரிமையாக அருகருகே உள்ள இருக்கைகளில் அமர வைக்கப்படுவார்கள்.
பொருந்தக்கூடிய பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு விதிமுறைகளுக்கு உட்பட்டு, விளையாட்டு உபகரணங்கள் மற்றும் இசைக்கருவிகளை வெளிப்படையான மற்றும் பயணிகளுக்கு உகந்த முறையில் கொண்டு செல்ல வசதி செய்யப்பட வேண்டும்.
செல்லப்பிராணிகளைக் கொண்டு செல்வதற்கும் விமான நிறுவனங்கள் தெளிவான, வெளிப்படையான கொள்கைகளை வெளியிட வேண்டும்.
குறிப்பாக தாமதங்கள், ரத்துசெய்தல்கள் மற்றும் விமானத்தில் ஏற அனுமதி மறுக்கப்படும் நேர்வுகளில், பயணிகளின் உரிமைகள் கட்டமைப்பைக் கண்டிப்பாகப் பின்பற்றுதல்.
விமான நிறுவனங்களின் இணையதளங்கள், மொபைல் செயலிகள், முன்பதிவுத் தளங்கள் மற்றும் விமான நிலைய கவுண்டர்கள் முழுவதும் பயணிகளின் உரிமைகளைத் தெளிவாகக் காட்சிப்படுத்துதல்.
பரவலான அணுகலையும் விழிப்புணர்வையும் உறுதி செய்வதற்காக, பயணிகளின் உரிமைகளைப் பிராந்திய மொழிகளில் தெளிவாகத் தெரிவித்தல்.
பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்துவதற்கும், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கும், குறைகளைக் குறைப்பதற்கும், விமானப் போக்குவரத்துச் சூழல் அமைப்பு முழுவதும் மிக உயர்ந்த பாதுகாப்புத் தரங்களைப் பேணுவதற்கும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது.
Read More : இவர்களுக்கு மட்டும் தான் ஆதார் e-KYC கட்டாயம்..! புதிய LPG விதி குறித்து மத்திய அரசு விளக்கம்..!



