தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முக்கியத் திட்டங்களில் ஒன்றான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், புதிதாக இணைக்கப்பட்டிருக்கும் 17 லட்சம் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் இன்று ரூ.1,000 உரிமைத்தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் பெண்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
ஏற்கனவே, தமிழகத்தில் சுமார் 1 கோடியே 13 லட்சம் பெண்கள் இந்த உரிமைத் தொகையைப் பெற்றுப் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று முதல் மேலும் 17 லட்சம் தகுதியான பெண்களுக்கு இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, சிறப்பு முகாம்களில் விண்ணப்பித்துத் தேர்வு செய்யப்பட்ட தகுதியுள்ள புதிய பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் இந்த ரூ.1,000 உரிமைத்தொகை நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பெண்கள், தங்கள் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணிற்குப் பணம் வரவு வைக்கப்பட்டதற்கான குறுஞ்செய்தி வந்துள்ளதா என்பதை உடனடியாகச் சரிபார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்தத் திடீர் வரவு, லட்சக்கணக்கான தமிழகப் பெண்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.



