மருத்துவ உலகில் ஒரு புரட்சிகரமான மைல்கல்லாக, சீன விஞ்ஞானிகள் ஸ்டெம் செல் (Stem Cell) சிகிச்சையின் மூலம் டைப் 2 நீரிழிவு நோயை (Type 2 Diabetes) முற்றிலும் குணப்படுத்தும் புதிய வழிமுறையை கண்டறிந்துள்ளனர். ஷாங்காய் சாங்ஜெங் மருத்துவமனை மற்றும் பெக்கிங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து மேற்கொண்ட இந்த ஆய்வு, சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது.
ஸ்டெம் செல் சிகிச்சை :
பொதுவாக டைப் 2 நீரிழிவு பாதிப்பு ஏற்படும்போது, கணையம் போதிய இன்சுலினை சுரக்க தவறிவிடுகிறது. இதனால் நோயாளிகள் வாழ்நாள் முழுவதும் மாத்திரைகளையும், இன்சுலின் ஊசிகளையும் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஆனால், இந்த புதிய முறையில் நோயாளியின் உடலில் இருந்தே செல்களை எடுத்து, ஆய்வகத்தில் ஸ்டெம் செல் தொழில்நுட்பம் மூலம் இன்சுலின் சுரக்கும் ‘கணையத் திட்டு’ செல்களை (Pancreatic Islets) செயற்கையாக உருவாக்குகின்றனர். பின்னர் இவை மீண்டும் நோயாளியின் உடலிலேயே செலுத்தப்படுகின்றன. இதன் மூலம் கணையத்தின் செயல்பாடு இயற்கையாகவே சீரடைந்து, இன்சுலின் சுரப்பு மீண்டும் தொடங்குகிறது.
25 ஆண்டுகாலப் போராட்டம் :
சுமார் 25 ஆண்டுகளாக தீவிர சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த 59 வயது முதியவர் ஒருவருக்கு, இந்த ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. வியக்கத்தக்க வகையில், சிகிச்சை முடிந்து வெறும் 11 வாரங்களிலேயே அவருக்கு இன்சுலின் ஊசிகளின் தேவை முற்றிலுமாக அற்றுப் போனது. தற்போது உலகிலேயே முதன்முறையாக, எந்தவிதமான மருந்தோ அல்லது ஊசியோ இன்றி, ரத்த சர்க்கரை அளவைச் சீராகப் பராமரிக்கும் முதல் நபராக இவர் உருவெடுத்துள்ளார் என விஞ்ஞானிகள் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளனர்.
எதிர்கால சவால்கள் :
இந்த சாதனை மருத்துவத் துறையில் ஒரு பெரும் திருப்புமுனையாகப் பார்க்கப்பட்டாலும், இப்போதைக்கு இது ஒரு தொடக்க நிலை மட்டுமே என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை ஒரே ஒரு நோயாளிக்கு மட்டுமே இந்தச் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. எனவே, இதன் பாதுகாப்பு மற்றும் நீடித்த செயல்திறனை உறுதிப்படுத்த இன்னும் பெரிய அளவிலான மருத்துவப் பரிசோதனைகள் தேவைப்படுகின்றன. அதிகப்படியான மக்கள் மத்தியில் இந்த சிகிச்சை முறை பரிசோதிக்கப்பட்டு வெற்றி பெற்றால் மட்டுமே, இது பொதுவான பயன்பாட்டிற்கு வரும். அதுவரை நோயாளிகள் மருத்துவர்களின் ஆலோசனையைப் பின்பற்றுவதே சிறந்தது.



