இந்தோனேசியாவில் அதிவேகமாக சென்ற பயணிகள் பேருந்து ஒன்று பயங்கர விபத்துக்குள்ளானதில் 15 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜாவா தீவில் உள்ள சுங்க சாலையில் நள்ளிரவில் நிகழ்ந்த இந்த விபாத்தில், மேலும் பலர் காயமடைந்து உயிருக்குப் போராடி வருகின்றனர்.
தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து வரலாற்று சிறப்புமிக்க யோக்யகர்த்தா நகரை நோக்கி சுமார் 34 பயணிகளுடன் ஒரு பேருந்து ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சென்று கொண்டிருந்தது. ஜாவா தீவின் நெடுஞ்சாலையில் சென்றபோது, எதிர்பாராதவிதமாகப் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. அதிவேகத்தில் சென்ற அந்தப் பேருந்து, சாலையோரமிருந்த கான்கிரீட் தடுப்புச் சுவரில் பலமாக மோதி பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். இந்த கோர விபத்தில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த 18 பேர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 5 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்தோனேசியாவில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்புதான் ஜகார்த்தாவில் உள்ள அலுவலக கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் பலியாகியிருந்தனர். அந்தத் துயரம் மறைவதற்குள்ளேயே தற்போது நிகழ்ந்துள்ள இந்த நெடுஞ்சாலை விபத்து அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read More : முட்டையில் புற்றுநோய் மருந்தா..? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த FSSAI..!!



