உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரோசாபாத் நகரில் ஆதேஷ் – மனோஜ் குமாரி என்ற ஜோடிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, திருமண ஏற்பாடுகள் தனியார் மண்டபத்தில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. திருமணத்துக்கு முன்பாக அங்கு நடைபெறும் திருமண ஊர்வலம் இரவு மண்டபம் வந்தடைந்தது. இரவு உணவு முடிந்த பின்னர், மணமக்கள் இருவரும் மாலை மாற்றி கொள்ளும் நிகழ்ச்சிக்கு தயாரானார்கள். இதற்காக மணமகன் முன்பே மேடைக்கு வந்து அமர்ந்திருந்தார். பின்னர் சிறிது நேரத்தில் அலங்கரிக்கப்பட்டு மணமகளும் மேடைக்கு வந்தார். அவர் தோழிகளுடன் மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது, மேடையில் இருந்த மணமகன் ஆதேஷ், திடீரென மணமகளின் கையை பிடித்து சீக்கிரம் வரும்படி இழுத்துச் சென்றுள்ளார். இந்த அவசரத்தில் மணமகள் மேடையில் தவறி விழுந்து விட்டார். ஆதேஷின் இந்த செயலால் மணப்பெண் கடும் கோபமடைந்தார். உடனே, இந்த திருமணம் வேண்டாம் என முடிவு செய்து ரத்து செய்து விட்டார். மணமகன் ஆதேஷின் செயலால் மணமகள் குடும்பத்தினர் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால் இரு வீட்டாரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பதற்றமான சூழல் உருவானது. இது பற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், விசாரணை நடத்தினர். பின்னர் இரு வீட்டு பெரியவர்களும் சமாதானம் அடைந்து, மணமகளை சமரசம் செய்ய முயன்றனர். ஆனால், மணமகள் மனோஜ் குமாரி தனது முடிவில் உறுதியாக இருந்து விட்டார். இதனால், வேறுவழியின்றி திருமணம் நிறுத்தப்பட்டு அனைவரையும் அமைதியாக போலீசார் வெளியேற்றினர்.