`வீட்டைக் கட்டிப்பார், கல்யாணத்தைப் பண்ணிப் பார்’ என ஒரு பழமொழி உண்டு. ஏனெனில் இந்த இரண்டையும் அதிக கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம். கல்யாணம் என்பது காலம் காலமாகவே மிகப்பெரிய நிகழ்வாகக் கருதப்பட்டு வருகிறது. இருவீட்டாருக்கும் பிடிக்க வேண்டும், மணப்பெண்ணுக்கும், மணமகனுக்கும் பிடிக்க வேண்டும். எல்லாமே கைகூடி வந்தால்தான் அடுத்தகட்டமாக திருமணமே நடக்கும்.
ஆனால் திருமண வயதில் உள்ள மணமகன்கள் அனைவரும் ஒரு சந்தையில் விற்கப்பட்டால் எப்படி இருக்கும்…? பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தில் தான் `இங்கு மணமகன்கள் விற்பனைக்கு கிடைப்பார்கள்’ என்பதுபோல சந்தை ஒன்று நடத்தப்படுகிறது. சௌரத் சபா (saurath sabha) என அழைக்கப்படும் இந்த நிகழ்வு சுமார் 700 வருடங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் பல மாவட்டங்களைச் சுற்றியுள்ள மைதில் பிராமணர்கள் (maithil brahmin) கலந்து கொள்வார்கள்.
இந்தக் கலாசாரம், கர்னாட் வம்சத்தின்போது ராஜா ஹரி சிங் என்பவரால் தொடங்கப்பட்டது. பல கோத்திரங்களைச் சேர்ந்த மக்களுக்கிடையே கலப்புத் திருமணத்தை ஊக்கப்படுத்தவும், வரதட்சணை இல்லாத வகையில் திருமணங்களை நடத்துவதற்கும் இந்தச் சந்தை தொடங்கப்பட்டுள்ளது. ஜூன் முதல் ஜூலை வரையிலான தொடர்ந்து 9 நாள்கள் நடைபெறும் இந்தச் சந்தையில், மணமகளின் தந்தை அல்லது சகோதரர் மணமகனைத் தேர்வு செய்வார்கள். பொருளாதாரம் மற்றும் கல்வித் தகுதியின் அடிப்படையில் ஆயிரக்கணக்கான மணமகன்கள் வேட்டி மற்றும் குர்தா அல்லது ஜீன்ஸ் மற்றும் சட்டைகள் அணிந்து மரங்களுக்குக் கீழ் அமர்ந்திருப்பர்.
மணமகன்கள் தேர்வாகும் பட்சத்தில், அவர்கள் கேட்கும் தொகையைக் கொடுத்து மணமகனை வாங்க வேண்டும். இருவருக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டதற்கு சாட்சியாக மணமகன்கள் மீது சிவப்பு சால்வை போடப்படும். குறிப்பாக மணமகன்கள் தேர்வு செய்யப்படுவதற்கு முன்பு அவர்களின் பிறப்புச் சான்றிதழ், கல்வித் தகுதிக்கான சான்றிதழ் அனைத்தும் பெண் வீட்டாரின் தரப்பில் இருந்து சரிபார்க்கப்படும். இந்தச் சந்தை அப்பகுதி மக்களிடையே புனிதமான நிகழ்வாகக் கருதப்படுகிறது.
இதைத் தொடங்கியவர்கள் மைதில் பிராமணர்கள் மற்றும் காயஸ்தர்கள். குருகுலத்திலிருந்து இளைஞர்களைத் தேர்ந்தெடுத்த பிறகு, குடும்பங்கள் தங்கள் மகள்களை இங்கே திருமணம் செய்து வைப்பார்கள். இங்கே, பையனுக்கும் பெண்ணின் குடும்பத்திற்கும் இடையே எந்த உறவும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு மிகுந்த கவனம் செலுத்தப்பட்டது. அந்த நேரத்தில், இது பிராமணர்கள் மற்றும் காயஸ்தர்களுக்காகத் தொடங்கப்பட்டது, ஆனால் இப்போது அது அனைவருக்கும் பொதுவானதாகிவிட்டது.
Readmore: மாணவர்களே… MBBS படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!