தமிழ்நாட்டை போலவே அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் நீண்டகாலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொதுவாக 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் உயர்கல்வித் தேவைகளைக் கருத்தில் கொண்டு வழங்கப்பட்டு வந்த இந்தத் திட்டத்தில், தற்போது ஒரு அதிரடி மாற்றத்தை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். கல்வியில் நவீனத் தொழில்நுட்பத்தைப் புகுத்தும் நோக்கில், இனி 6-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும் விலையில்லா மடிக்கணினிகள் (Laptop) வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின் நோக்கம் குறித்துப் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, “இன்றைய உலகம் தொழில்நுட்பத்தைச் சார்ந்து இயங்குகிறது. மாணவர்கள் மிகச்சிறிய வயதிலேயே கணினி அறிவையும், இணையதளப் பயன்பாட்டையும் முறையாக கற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் வருங்காலப் போட்டித் தேர்வுகளையும், உலகளாவிய தொழில்நுட்ப மாற்றங்களையும் அவர்களால் எளிதில் எதிர்கொள்ள முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார். 11-ம் வகுப்பு வரும் வரை காத்திருக்காமல், நடுநிலைப்பள்ளியிலேயே லேப்டாப் வழங்குவதன் மூலம் மாணவர்களின் கற்றல் திறன் பன்மடங்கு அதிகரிக்கும் என புதுச்சேரி அரசு நம்புகிறது.
புதுச்சேரியின் இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, தமிழக அரசுப் பள்ளி மாணவர்களிடையேயும் ஒரு பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. தமிழகத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் தொடங்கப்பட்ட இலவச லேப்டாப் திட்டம், கடந்த சில ஆண்டுகளாக கொரோனா மற்றும் நிதி நெருக்கடி காரணமாக சற்றுத் தொய்வடைந்தது. தற்போது திமுக அரசு விடுபட்ட மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், புதுச்சேரியைப் போல தமிழகத்திலும் 6-ம் வகுப்பு முதலே இந்த திட்டத்தை ஏன் செயல்படுத்தக் கூடாது என்ற கோரிக்கை குரல்கள் எழுந்துள்ளன.
Read More : தாய் வழி சொத்தில் கணவர், பிள்ளைகளுக்கு உரிமை உள்ளதா..? உயில் இல்லாத பட்சத்தில் என்ன செய்வது..?



