தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அண்மையில் நடத்திய குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ முதன்மை தேர்வுகளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது இது தொடர்பாக தேர்வாணையம் அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெறவிருந்த இந்த தேர்வுகள் தொழில்நுட்ப காரணங்களால் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, குளறுபடிகளுக்கு காரணமான அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாய்ந்துள்ளது.
தேர்வு ரத்து செய்யப்பட்டது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன் முதற்கட்டமாக, நிர்வாக குளறுபடிகளுக்குப் பொறுப்பான இரண்டு உதவிப் பிரிவு அலுவலர்கள், இரண்டு பிரிவு அலுவலர்கள், ஒரு சார் செயலாளர் மற்றும் கணினி நிரலர்கள் என மொத்தம் 6 பேர் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுதவிர, ஒரு துணை செயலாளர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசுப் பணிக்கான முக்கியத் தேர்வில் இத்தகைய தவறுகள் நடந்ததை தேர்வாணையம் மிக தீவிரமாக கருதியிருப்பதை இந்த நடவடிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன.
தொழில்நுட்ப சிக்கலால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தேர்வர்களின் நலனை கருத்தில் கொண்டு, ரத்து செய்யப்பட்ட தேர்வுகள் மீண்டும் நடத்தப்பட உள்ளன. இதன்படி, ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தொகுதி II மற்றும் தொகுதி IIA முதன்மைத் தேர்வுகள் வரும் மார்ச் 15-ஆம் தேதி (15.03.2026) அன்று முற்பகல் மற்றும் பிற்பகலில் நடைபெறும் என தேர்வாணைய செயலாளர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இதற்கான கூடுதல் விவரங்கள் மற்றும் புதிய வழிகாட்டுதல்கள் ஏற்கனவே தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இனிவரும் காலங்களில் இத்தகைய குளறுபடிகள் மீண்டும் நிகழாமல் இருக்க, தேர்வு நடைமுறைகளில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் புதிய வழிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
Read More : தங்க நகைகளை ஏன் ‘பிங்க்’ நிற பேப்பரில் சுற்றித் தருகிறார்கள்..? பலருக்கும் தெரியாத சுவாரஸ்ய பின்னணி..!!



